திருமலை: திருமலையில் இருந்து பாபவிநாசம் செல்லும் சாலையில் ஆலயத்தின் திருமண மேடையில் புரோகிதர்கள் சங்கம் உள்ளது. இங்கு புரோகிதர்கள் ஓய்வு அறை ஒன்று உள்ளது. இங்கு புதன்கிழமை 10 அடி நீள நாகப் பாம்பு ஒன்று புரோகிதர்கள் அறை பகுதியில் நுழைந்தது. இதைக் கண்ட அவர்கள் அலறியடித்து ஓடினர்.
இதையடுத்து, ஆலயத்தின் பாம்பு பிடிக்கும் ஊழியர் வந்து பாம்பைப் பிடித்து வனப்பகுதியில் விட்டார். இந்நிலையில், அதற்கு மறுநாளும் (நேற்று முன்தினம்) 8 அடி மலைப்பாம்பு ஒன்று புரோகிதர் சங்கக் கட்டடத்துக்குள் நுழைந்தது. தகவல் அறிந்து வந்த ஊழியர் அந்தப் பாம்பையும் பிடித்து வனப்பகுதிக்குள் விட்டார். தொடர்ந்து இப்பகுதியில் பாம்புகள் படையெடுப் பதால் புரோகிதர்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.