பெங்களூரு: பொது இடத்தில் பலர் பார்க்க, மனைவியை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் அடித்து உதைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்தில் உள்ள பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த குமாரசாமி, முடிகிரே தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். இவரது மனைவி சவிதா, மாநில அரசில் உதவிப் பொறியாளராகப் பணியாற்றி வருகிறார்.
ஹாசனை சேர்ந்த பெண் ஒருவருடன் குமாரசாமிக்கு நெருங்கிய தொடர்பு உள்ளது. இருவருக்கும் இடையே நடந்த உரையாடல் பதிவு செய்யப்பட்ட 'சிடி' ஒன்று, கடந்த ஆறு மாதங் களுக்கு முன் வெளியானது. இதனால் கோபம் அடைந்த சவிதா, கணவனை விட்டுப் பிரிந்தார். குமாரசாமியும் பெங்களூரில் எம்.எல்.ஏ.க்களுக்கான விடுதியில் கடந்த ஆறு மாதங்களாக தங்கியுள்ளார். இந்த நிலையில், நேற்று முன்தினம், குமாரசாமி தங்கியுள்ள விருந்தினர் மாளிகைக்கு மனைவி சவிதா வந்தார். அவருடன் அவரது குடும்பத்தினரும் காவல்துறையினரும் வந்திருந்தனர்.
மனைவியைப் பார்த்த குமாரசாமி அவருடன் பேசுவதைத் தவிர்த்து காரை நோக்கிச் சென்றார். இதை பார்த்த சவிதா வேகமாக சென்று காரில் இருந்த சாவியை எடுத்துக் கொண்டார். இதையடுத்து ஆத்திரமடைந்த குமாரசாமி, பொது இடத்தில் சவிதாவை சரமாரியாக அடித்து உதைத்தார். காவல்துறையினர் தடுத்து நிறுத்தி இருவரையும் பிரித்தனர். பின்னர், இருவரையும் காவல் நிலையத்துக்குக் கொண்டு சென்றனர். அங்கும் ஆத்திரம் தீர மனைவியை குமாரசாமி அடித்துள்ளார். இதையடுத்து, ஆத்திரமடைந்த சவிதாவின் குடும்பத்தினர் குமாரசாமி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
இது பற்றி சவிதா கூறுகையில், "இது எங்களின் குடும்ப விவகாரம்; கணவன் மீது புகார் கொடுக்க விரும்பவில்லை. பிரச்சினையைப் பேசி தீர்த்துக் கொள்வோம். "என் கணவனிடம் இருந்து விலகுமாறு, அந்தப் பெண்ணை எச்சரிக்கவே கணவனைப் பார்க்க வந்தேன்," என்றார். ஆனால், குமாரசாமி, எதுவும் தெரிவிக்க மறுத்து விட்டார்.