திருச்சி: தங்களுக்கு அமைச்சர் தெரிவிக்கும் நன்றி தேவையில்லை, நல்ல குடிநீரே தேவை என திருவரங்கம் தொகுதி மக்கள் அமைச்சர் வளர்மதியிடம் தெரிவித்தனர். மேலும், உப்புத் தண்ணீர் நிறைந்த புட்டியைக் கொடுத்து அதை குடிக்குமாறு அமைச்சரிடம் பொதுமக்கள் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. சட்டப்பேரவைத் தேர்தலில் திருவரங்கத் தொகுதியில் களமிறங்கிய வளர்மதி, கணிசமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதைய டுத்து அமைச்சர் பதவியும் கிடைத்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் தொகுதி மக்களுக்கு அவர் நேரில் நன்றி தெரிவித்தார். அப்போது கரை யாம்பட்டி கிராமத்துக்குச் சென்ற அவரை அப்பகுதி மக்கள் சூழ்ந்து கொண்டனர்.
அங்கு நிலவும் குடிநீர் பிரச்சினை குறித்துப் புகார் மனு அளித்ததுடன், தாங்கள் அன்றாடம் குடிக்கும் உப்புத் தண்ணீரை அமைச்சரிடம் கொடுத்து அவரையும் குடிக்குமாறு கூறினர். "நாங்கள் தினந்தோறும் இந்தக் குடிநீரைத்தான் பயன்படுத்துகிறோம். ஏனெனில், எங்களுக்கு வேறு ஏதும் மாற்று வழிகள் இல்லை. "எங்களுக்கு உங்களுடைய நன்றி தேவையில்லை. மாறாக எங்களுக்குத் தேவையான சுத்தமான குடிநீர் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுத்தீர்கள் எனில் அதுவே போதுமானது," என்று பொதுமக்கள் அமைச்சர் வளர்மதியிடம் கேட்டுக்கொண்டனர். நன்றி தெரிவிக்க வந்த இடத்தில் இப்படி திடீரென மக்கள் குறை கூறியதால் சற்றே அதிர்ச்சியடைந்தார் அமைச்சர் வளர்மதி. பின்னர், குடீநீர் பிரச்சினையைத் தீர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக் கப்படும் என உறுதியளித்த பிறகு அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.