முத்துப்பேட்டை: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே தில்லைவிளாகத்தில் பிற்கால சோழர் காலத்தைச் சேர்ந்த சமணர் சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தில்லைவிளாகத்தில் பழமையான பெரிய அய்யனார் கோயில் உள்ளது. இந்தக் கோயில் குட முழுக்கு கடந்தாண்டு நடந்தது. இதற்காக திருப்பணி செய்தபோது கோயில் அருகே சிதைந்த நிலையில் சிறிய சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இந்தக் கற்சிலை குறித்து தொல்லியல்துறை ஆய்வாளர் மன்னை பிரகாஷ் நேற்று முன் தினம் ஆய்வு செய்தார். அதில் தற்போது கிடைத்துள்ள சமணர் சிற்பம் 23 சென்டி மீட்டர் நீளம், 20 செ.மீ. அகலம் உள்ளது.
படைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ள இச்சிலை 11 மற்றும் 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. பிற்கால சோழர்காலத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படும் இச்சமணர் வடிவம் பீடத்தில் தியான கோலத்தில் அமர்ந்தவாறு உள்ளது. தலைப்பகுதியில் முக்குடையும் அரை நீள்வட்ட திருவாசி (சிலையின் பீடத்தை அலங்கரிக்கும் உலோகத்திலான வேலைப்பாடு) காணப்படுகிறது. சமணரின் இருபுறமும் யட்சன், யட்சிகள் சாமரம் வீசுகின்றனர். கால், கைகளில் தசை திட்டு, மடிப்புகள் உள்ளன. சிலையின் தலைப் பகுதியோடு முக்குடை சேர்ந்திருப்பது தனிச் சிறப்பாகும். ஆனாலும் சிலையின் முகப்பகுதி சிதிலமடைந்துள்ளது. திருத்துறைப்பூண்டி தாலுகா பகுதியில் திருத்துறைப்பூண்டி, தோலி, வேம்பழகன்காடு பகுதிகளில் ஏற்கெனவே 3 சமணர் சிற்பங்கள் கிடைத்துள்ளன. தற்போது தில்லைவிளாகத்தில் கிடைத்துள்ள இந்த 4வது சிலை உருவத்தில் மிக சிறியதாகும்.
திருத்துறைப்பூண்டி அருகே பள்ளங்கோயிலில் நடந்த தொல்லியல் ஆய்வில் ஏற்கெனவே சமணர்கள் குறித்த செப்பேடுகள் கிடைத்துள்ளன. இப்பகுதியில் சமணர்கள் அதிகளவில் வாழ்ந்துள்ளதற் கான ஆதாரங்கள் கிட்டியுள் ளன. சமண கல்விக்கூடமும் செயல்பட்டு வந்துள்ளது. அதில் மாணவர்கள் பலர் தங்கி பயின்றுள்ளனர். அப்போதைய பல்லவ மன்னன் நரசிம்ம வர்மன், சமணர்களுக்காக ஏராளமான நிலங்களைக் கொடையளித்துள்ளான். அங்கு பயின்ற மாணவர்களின் இருப்பிடங்கள் தோறும் சமணர் சிலைகள் வழிபாட்டில் இருந்துள்ளன. அவைதான் தற்போதைய ஆய்வில் கிடைக்கப் பெற்றுள்ளன என்றார்.