தஞ்சை: ஆடிப் பெருக்கு விழா நேற்று தமிழகம் முழுவதும் சிறப் பாகக் கொண்டாடப்பட்டது. மேலும், நூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் அதிசயமாக நேற்று ஒரே நாளில் ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை, குருப் பெயர்ச்சி ஆகியவை அமைந்துள்ளன. இத னால் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. காவிரி டெல்டா பகுதியில் உள்ள ஆறுகளில் நேற்று ஆடிப் பெருக்கு விழாவை சிறப்பாகக் கொண்டாடி ஏராளமான பெண்கள் வழிபாடு நடத்தினர். மேட்டூர் அணையில் இருந்து ஆடிப்பெருக்கு விழாவிற்காக காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்ட தண்ணீர் கும்பகோணம் வரை சென்றது.
புதுமணத் தம்பதிகள் திரும ணத்தின் போது அணிவிக்கப்பட்ட மாலைகளைக் கொண்டு வந்து ஆற்றில் விட்டனர். தாலிக் கயிற்றை மாற்றி கொண்டனர். பிறகு சாமிக்குப் படைக்கப்பட்ட வெல்லம் கலந்த பச்சரிசி, பழ வகைகளை ஒருவருக்கொருவர் பரிமாறி கொண்டனர். சிறுவர்கள் மரத்தினால் செய்யப்பட்ட சப்பரங்களை விட்டு மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். ஆடிப் பெருக்கு விழாவையொட்டி ஆற்றங்கரைகளில் பலத்த போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் 18ஆம் தேதி ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது. நகர்ப் பகுதிகளைக் காட்டிலும் கிராமப்புறங்களில் இந்நிகழ்வு சிறப்பாக கொண்டாடப்படும்.