எதிரி நாடுகளின் போர் விமானங்கள் இந்திய வான் எல்லைக்குள் நுழைவதை மின்னல் வேகத்தில் கண்டுபிடித்துத் தடுப்பதற்கு AWAC என்னும் கண்காணிப்புக் கருவிப் பொருத்திய விமானங்கள் இந்திய தற்காப்புப் படைக்குத் தேவை. ஏற்கெனவே அதுபோன்ற மூன்று விமானங்கள் ரஷ்யாவிட மிருந்து பெறப்பட்டன. மேலும் மூன்று EMB-145 ரக விமானங் களை வாங்கப் பிரேசில் நாட்டின் 'எம்ப்ரேயர்' நிறுவனத்துடன் கடந்த 2008ஆம் ஆண்டு ஒப்பந்தம் ஒன்று செய்துகொள்ளப்பட்டது.
அந்த $208 மில்லியன் ஒப்பந் தத்தில் தற்காப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) கையெழுத்திட்டது. அப் போது காங்கிரசு தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இருந்தது. ஒப்பந்தப்படி மூன்று விமானங்களையும் எம்ப்ரேயர் நிறுவனம் தயாரித்து இந்தியாவிடம் வழங்கி விட்டது. அவற்றில் கண்காணிப்புச் சாதனங்களைப் பொருத்தும் பணி வரும் டிசம்பரில் முடிவடைய இருக்கிறது.
இந்த விமான ஒப்பந்தம் செயல்பாட்டில் இருக்கும்போதே கடந்த 2010ஆம் ஆண்டில் எம்ப்ரேயர் நிறுவனம் மீது லஞ்சப் புகார் எழுந்தது. டொமினிக்கன் குடியரசிடம் விமான ஒப்பந்தம் ஏற்படுத்த அந்நிறுவனம் லஞ்சம் வழங்கியதாக அப்போது எழுந்த குற்றச்சாட்டின் மீது அமெரிக்க நீதித் துறை விசாரணையைத் தொடங்கியது. இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை பிரேசில் செய்தித்தாள் ஒன்று இந்திய விமான ஒப்பந்தம் தொடர்பாக அதிர்ச்சி செய்தியை வெளியிட்டது.
டொமினிக்கனுடன் ஒப்பந்தம் ஏற்படுத்த லஞ்சம் பெறப்பட்டதைப் போல இந்தியாவின் விமான ஒப்பந்தத்தைப் பெறவும் எம்ப்ரேயர் நிறுவனம் லஞ்சம் வழங்கி இருக்கலாம் என்றும் பிரிட்டனைச் சேர்ந்த இடைத்தரகர் ஒருவருக்கு அந்த லஞ்சப் பணம் வழங்கப்பட்டு இருக்கலாம் என்றும் அந்த செய்தித்தாள் குறிப்பிட்டது.