புதுடெல்லி: சிந்து நதியில் இருந்து பாகிஸ்தானுக்கு தண்ணீர் தருவதை நிறுத்துவது குறித்து பிரதமர் மோடி நேற்று ஆலோசனை நடத்தினார். பாகிஸ்தானுடனான 56 ஆண்டு கால சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மீறுவதன் மூலம் இந்தியாவுக்கு ஏற்படும் சாதக, பாதகங்கள் குறித்து மத்திய நீர் வளத்துறை அமைச்சர் உமா பாரதியும் மற்ற உயர்மட்ட அதிகாரிகளும் பிரதமருக்கு விளக்கினர்.
பயங்கரவாதத்தை தூண்டிவிடும் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி தரவேண்டும் என மத்திய அரசுக்கு நிர்பந்தங்கள் குவிந்து வருவதால் பாகிஸ்தானுக்கு சிந்து நதி நீரைத் திறந்து விடுவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிந்து நதி நீரை பகிர்ந்து கொள்வது குறித்து 1960ஆம் ஆண்டு அப்போதைய இந்தியப் பிரதமர் நேருவுக்கும் பாகிஸ்தான் அதிபர் அயூப் கானுக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டிருந்தது.