லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம், சீதாபூர் மாவட்டத்தில் டிராக்டர் ஒன்று குளத்திற்குள் கவிழ்ந்ததில் மூவர் உயிரிழந்தனர். 12 பேர் படுகாயம் அடைந்தனர். சீதாபூர் மாவட்டத்தில் நேற்று காலை கோயிலுக்கு சென்றுவிட்டு 15 பேர் அடங்கிய குழு ஒன்று டிராக்டரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது விபத்து நேர்ந்தது. காயம் அடைந்த 12 பேரும் சிகிச்சைக்காக அருகில் இருந்த பிஸ்வான் சமூக சுகாதார மையத்தில் சேர்க்கப் பட்டுள்ளனர்.
இதில் நால்வரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதால் அவர்களை மாவட்ட தலைமை மருத்துவமனையில் சேர்த்திருப்பதாக சீதாபூர் போலிசார் தெரிவித்தனர். இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது. குளம் அருகே இருந்த வளைவில் திரும்பும்போது ஓட்டுநர் தனது கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து நேர்ந்ததாகக் கூறப்படுகிறது. போலிசாரின் விசாரணை தொடர்கிறது.