குஜராத்: குஜராத் மாநிலம், அகமதாபாத் அருகே மினி லாரியும் லாரியும் நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்தில் 14 பக்தர்கள் உயிரிழந்தனர். இதுதொடர்பாக காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: "ராஜ்கோட் மாவட்டத்திலுள்ள சோக்தா கிராமத்தைச் சேர்ந்த 17 பேர், ஒரு மினி லாரியில் பாஞ்மஹல்ஸ் மாவட்டத்திலுள்ள பவகத் மலைக் கோயிலுக்கு ஆன்மீகப் பயணம் சென்றனர்.
அங்கு தரிசனம் முடிந்து, வெள்ளிக்கிழமை இரவில் மீண்டும் மினி லாரியில் சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். அகமதாபாத் அருகே நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த போது, அவ்வழியாக அதிவேகமாக வந்த லாரியும் மினிலாரியும் நேருக்குநேர் மோதின. இந்தக் கோர விபத்தில் மினி லாரியில் பயணித்த 14 பக்தர்கள் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்துக்குக் காரணமான லாரி ஓட்டுநர் தலைமறைவாகி விட்டார். அவரைத் தேடி வருகிறோம்," என்றார் அந்த அதிகாரி.