சென்னை: அதிமுக பொதுச்செயலர் பதவிக்கு சசிகலா நடராஜன் தகுதியற்றவர் என்று கூறி வந்த அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் நாஞ்சில் சம்பத், தற்போது திடீரென தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளார். சசிகலா தலைமையை ஏற்றுக்கொண்டு தொடர்ந்து கட்சிப் பணியாற்றப்போவதாக அவர் அறிவித்துள்ளார். நேற்று அதிமுக பொதுச்செயலர் சசிகலாவை நேரில் சந்தித்துப் பேசினார் நாஞ்சில் சம்பத். அப்போது அவரை சசிகலா தரப்பினர் சமாதானப்படுத்தியதாகத் தெரிகிறது. இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சசிகலாவுடனான சந்திப்பு தமக்கு மனநிறைவைத் தருவதாகவும், மீண்டும் கட்சிப் பணிகளுக்காக தீவிரமாக களம் இறங்கப்போவதாகவும் தெரிவித்தார். "தமிழ்நாடு முழுவதும் எட்டுத் திசைகளிலும் சுற்றிச்சுழன்று சசிகலா தலைமையை ஆதரித்து உரையாற்றுவேன்.
அதிமுக அரசின் சாதனைகளை விரிவாக எடுத்துரைப்பேன். "வருகிற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக இமாலய வெற்றி பெற பிரசாரம் செய்வேன். தொண்டர்கள் மத்தியில் நம்பிக்கையை நிலைநாட்டும் வகையில் எனது பிரசார வியூகம் இருக்கும்," என்றார் நாஞ்சில் சம்பத். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வின் மறைவுக்கு பிறகு தாம் தனித்து விடப்பட்டது போன்று உணர்ந்ததாகக் குறிப்பிட்ட அவர், அதன் எதிரொலி யாகவே பொது வாழ்க்கை போதும் என்ற முடிவுக்கு வந்ததாக கூறினார்.