சென்னை: மெரினாவில் நடைபெற்ற போராட்டம் வன்முறையில் முடிந்ததற்கு திரைப்பட நடிகர்களே காரணம் என போராட்டக் குழுவைச் சேர்ந்தவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ஜல்லிக்கட்டுக்காக தன்னெழுச்சியாக நடைபெற்ற மக்கள் போராட்டத்தை தாங்கள் வழிநடத்தியது போல் நடிகர்கள் லாரன்ஸ், ஆதி, ஆர்.ஜே.பாலாஜி ஆகியோர் சித்திரித்து ஏமாற்றியதாகவும் அவர்கள் சாடியுள்ளனர். "போராட்டத்தின் இடையில் திடீரென உள்ளே நுழைந்த நடிகர்கள் மூவரும் முதலில் மாணவர்களோடு மாணவர்களாக அமர்ந்தனர்.
பின்னர் மாணவர்கள் மத்தியில் பேசினர். போகப் போக மாணவர்களின் தலைவர்களாகக் காட்டிக் கொண்டனர். "கடைசியில் இவர்கள் சொன்னால் அத்தனை மாணவர்களும் கேட்பார்கள் என்ற தோற்றத்தை உருவாக்கி, போராட்டத்தை முடித்து வைக்கப் பார்த்தார்கள். "இவர்களின் இந்த செய்கைதான் கடைசி நேரத்தில் போராட்டத்தில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்திவிட்டது," என்று மெரினா போராட்டக் குழுவினர் புகார்களை அடுக்குகின்றனர். இதனால் சம்பந்தப்பட்ட நடிகர்களின் செயல்பாடு குறித்து சமூக வலைத்தளங்களில் பலர் காரசாரமாக கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.