கோல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் மகனுடன் சேர்ந்து 12ஆம் வகுப்பு தேர்வு எழுதிய பெற்றோருக்கு பாராட்டுகள் குவிகின்றன. மாணவன் பிப்லப், அவனது 43 வயது தந்தை பலராம், 33 வயது தாய் கல்யாணி என மூவரும் கடந்த சில ஆண்டுகளாக 12ஆம் வகுப்பு தேர்வுக்குத் தங்களைத் தயார் செய்து வந்தனர். பள்ளி சென்று கல்வி பயின்ற அவர்களைப் பலரும் கிண்டல் செய்து வந்த நிலையில், அவர்கள் அண்மையில் 12ஆம் வகுப்பு தேர்வு எழுதினர்.
"படிப்பறிவு இல்லை என்பதால், உறவினர்கள் எங்களை மதிக்கவில்லை. எங்களாலும் படிக்க முடியும் என்பதை அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். அதற்காக தான் கல்வி கற்கத் தொடங்கினோம்," என்றார் பலராம். "கல்வி கற்க வேண்டும் என்ற பிப்லப் பெற்றோரின் ஆர்வம் பாராட்டப்பட வேண்டியது," என்றார் அவர்கள் கல்வி பயிலும் அரோங்கட்டா ஹஜ்ராபூர் பள்ளியின் தலைமையாசிரியர்.