மகன் தொகுதியில் தாய்; தாய் தொகுதியில் மகன்

மகன் தொகுதியில் தாய்; தாய் தொகுதியில் மகன்

1 mins read

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 29 பேர் அடங்கிய வேட்பாளர் பட்டியலைப் பாஜக வெளியிட்டுள்ளது. இதில் மத்திய அமைச்சர் மேனகா காந்தி, பாஜக எம்.பி. வருண் காந்தி ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப் பட்டுள்ளது. பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோ‌ஷிக்கு இம்முறை வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. மகன் வருண் காந்திக்காக தான் கடந்த மக்களவைத் தேர்தலில் வென்ற உத்தரப்பிரதேச மாநிலம், பிலிபிட் தொகுதியை விட்டுக்கொடுக்க முன்வந்துள்ளார் மத்திய பெண்கள் நல மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி. வருண் காந்தி கடந்த முறை சுல்தான்பூர் தொகுதியில் வென்றார். உத்தரப்பிரதேசத்தில் பலம் வாய்ந்த கட்சிகளான சமாஜ் வாடியும், பகுஜன் சமாஜும் இம்முறை கூட்டணி அமைத்துள்ளதால் பாஜகவுக்கு இத்தேர்தல் கடும் சவால் அளிக்கும். இதற்கிடையே, பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோ‌ஷிக்கு இந்தத் தேர்தலில் வாய்ப் பளிக்கப்படவில்லை. கடந்த 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் கான்பூர் தொகுதியில் போட்டியிட்டு முரளி மனோகர் ஜோ‌ஷி வெற்றிபெற்றார். இந்நிலையில், இந்தத் தேர்தலில் கான்பூர் தொகுதியில் போட்டியிடுவதற்கு உத்தரப் பிரதேச மாநிலத்தின் குறு, சிறு நிறுவனங்கள் துறை அமைச்சர் சத்யதேவ் பச்சௌரிக்கு வாய்ப்பளிக்கப் பட்டுள்ளது. வரும் மக்களவைத் தேர்தலில் போட்டி யிடுவதற்குப் பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே. அத்வானி, பி.சி. கந்தூரி, கல்ராஜ் மிஸ்ரா உள்ளிட் டோருக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.