புதுடெல்லி: டெல்லியில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் அக்சய் குமார் சிங், வினய் குமார் சர்மா, பவன் குப்தா, முகேஷ் சிங் ஆகிய நால்வருக்கும் 2017ல் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதனை டெல்லி உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ள நிலையில் குற்றவாளிகள் தரப்பில் சீராய்வு மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால் இந்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதற்கிடையே குற்றவாளிகளில் வினய்குமார் சர்மா, முகேஷ் சிங் ஆகியோர் தூக்கு தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனுக்களை தாக்கல் செய்தனர்.
இதனையும் நேற்று நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு தள்ளுபடி செய்தது. இதனால் குற்றவாளிகள் வரும் 22ஆம் தேதி தூக்கிலிடப்படுவது உறுதியாகிவிட்டது.
மறுசீராய்வு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதை நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி வரவேற்றுள்ளார்.