துக்ளக் இதழின் 50வது ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசிய இரு கருத்துகள் தமிழக அரசியல் களத்தை ஆக்கிரமித்து வருகின்றன. “முரசொலி படித்தால் திமுககாரர் என்பார்கள்; துக்ளக் படித்தால் அறிவாளி என்பார்கள்,” என்று அவ்விழாவில் பேசிய கருத்துக்கு, “முரசொலி படிப்பவன் தன்மானம் மிக்கவன்,” என திமுக சார்பில் பதில் தரப்பட்டது.
இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்ட இரு அமைச்சர்கள் ரஜினியின் கருத்தை வலிய வந்து ஆதரித்தார்கள்.
திமுககாரர்கள்தான் முரசொலி படிப்பார்கள் என்று ரஜினி சொன்னதில் தவறேதும் இல்லை என்றார் அமைச்சர் ஜெயக்குமார். மற்றோர் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறுகையில், “நான் சிறுவயது முதலே துக்ளக் படிக்கிறேன். அந்த வகையில் துக்ளக் படிப்பவர்கள் அறிவாளிகள் என்று கூறிய ரஜினியின் கருத்தை ஆதரிக்கிறேன்,” என்றார்.
இந்த விவகாரம் புகைந்துகொண்டு இருக்கும்போதே ஈ.வெ. ராமசாமி பெரியார் பற்றி ரஜினி சர்ச்சை கருத்தை வெளியிட்டதாக ஒரு பிரச்சினை கிளம்பி உள்ளது.
ரஜினி தமது கருத்தைத் திரும்பப் பெறாவிட்டால் அவரது வீட்டு முன் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று திராவிடர் விடுதலைக் கழக சென்னை மாவட்டச் செயலாளர் உமாபதி கூறினார். மேலும், தமிழ்நாடு முழுவதும் ஆறு மாவட்டங்களில் ரஜினிக்கு எதிராக காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் திராவிடர் விடுதலைக் கழகத்தினர் அளித்த புகார் மனுவில், 1971ஆம் ஆண்டு சேலத்தில் பெரியார் நடத்திய பேரணி தொடர்பாக ரஜினி பொய்யான தகவலைக் கூறியிருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. வதந்தி பரப்பி பொது அமைதியைக் குலைக்கும் வகையில் பேசிய ரஜினி மீது நடவடிக்கை எடுக்குமாறு அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.
கோவை, நாமக்கல், ஈரோடு, புதுக்கோட்டை, சேலம் ஆகிய மாவட்டங்களிலும் பகுஜன் சமாஜ் கட்சி, தமிழர் தேச மக்கள் முன்னணி, புரட்சிகர இளைஞர் முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் ரஜினிக்கு எதிராக காவல் நிலையங்களில் புகார் அளித்து உள்ளனர்.
இந்நிலையில், ரஜினிகாந்துக்கு பாதுகாப்பு அரணாக பாஜக துணை நிற்கிறது. அக்கட்சியின் தேசிய செயலாளர் ஹெச். ராஜா, “திராவிடர் கழகத்தினரின் மிரட்டல்கள் குறித்து ரஜினி கவலைப்பட தேவையில்லை. அவர் மீது சட்டப்படி எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது,” என்று தெரிவித்துள்ளார்.