அமராவதி: ஆந்திராவில் உள்ளாட்சித் தேர்தலை வரும் மார்ச் 15ஆம் தேதிக்குள் நடத்த தீர்மானிக்கப் பட்டுள்ளதாக அம்மாநிலத்தின் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் நானி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அமராவதியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உள்ளாட்சித் தேர்தலில் வாக்காளர்களுக்குப் பணம், மதுபானம் போன்றவற்றை வழங்குவோருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்க அரசு முடிவு செய்திருப்பதாகக் குறிப்பிட்டார்.
பஞ்சாயத்து ராஜ் சட்டத்தில் சில மாற்றங்களைச் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், அதன்படி உள்ளாட்சித் தேர்தலில் முறைகேடுகளில் ஈடுபடும் வேட்பாளர்கள் கையும் களவுமாகப் பிடிபட்டால் அவர்களால் தேர்தலில் போட்டியிட முடியாது என்றார்.
“தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு வாக்காளர்களுக்குப் பணம், மது வழங்குவது போன்ற முறைகேடுகள் நிரூபிக்கப்பட்டால் அவர்களின் பதவி பறிக்கப்படும். மேலும் இந்தக் குற்றங்களுக்கு தற்போது 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது. அது 3 ஆண்டுகளாக உயர்த்தப்படும்,” என்று அமைச்சர் நானி மேலும் தெரிவித்தார்.
ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அரசு தொடர்ந்து பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.