புதுடெல்லி: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், நேற்று டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசினார். இந்தியா-அமெரிக்கா இடையிலான பல்வேறு துறை விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் பேசினர்.
முதலில் டிரம்ப்பும் மோடியும் தனியாகப் பேச்சுவார்த்தை நடத்தினர். வர்த்தகம், ராணுவம் மற்றும் இரு நாட்டு அரசதந்திர உறவுகள் குறித்து விவாதித்தனர்.
இந்தப் பேச்சுவார்த்தையின் நிறைவில் இந்தியா- அமெரிக்கா இடையே எரிசக்தி, பாதுகாப்பு உள்ளிட்ட மூன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
மேலும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில் 3 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டன.
டிரம்ப்-மோடி முன்னிலையில் இதற்கான ஒப்பந்தத்தில் அதிகாரிகள் கையெழுத்திட்டனர்.
இந்த ஒப்பந்தத்தின்படி அமெரிக்காவின் அப்பாச்சி மற்றும் எம்எச்-60 ரோமியோ ஹெலிகாப்டர்கள் உள்ளிட்ட நவீன ராணுவ உபகரணங்கள் இந்திய ராணுவத்திற்கு வாங்கப்படும்.
அந்த அதிநவீன பாதுகாப்புக் கருவிகளை இந்தியாவுக்கு வழங்க அமெரிக்கா முன்வந்துள்ளது. குறிப்பாகப் பயங்கரவாதத்துக்கு எதிராக அதிநவீன ஆயுதங்களை இந்தியா பயன்படுத்த அமெரிக்கா உதவும் என்று கூறப்படுகிறது.
எம்.எச்.60 ரோமியோ வகையைச் சேர்ந்த அந்த ஹெலிகாப்டர்கள் நீண்ட நேரம் பறக்கும் ஆற்றல் வாய்ந்தவை.
பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவது மட்டும் அல்லாது வர்த்தக ஒப்பந்தங்களுக்கான பேச்சு வார்த்தையும் தொடங்கும். அது குறித்து விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என இந்தியப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.