புதுடெல்லி: கொரோனா கிருமித்தொற்று காரணமாக ஏற்படக்கூடிய இந்தியப் பொருளியல் பாதிப்பைக் குறைக்க நாட்டின் மத்திய வங்கியான ரிசர்வ் வங்கி தடாலடியாக நான்கு அம்ச திட்டத்தை அறிவித்து உள்ளது.
போதுமான நிதி சந்தையில் இருப்பதை உறுதி செய்வது, வங்கிகள் தாராளமாக கடன் வழங்க ஏற்பாடு, கடனைத் திருப்பிச் செலுத்துவதில் உள்ள நெருக்கடியைக் குறைப்பது, சந்தையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்க நடவடிக்கை ஆகியவை அந்த முக்கிய நான்கு அம்சங்கள் என்று மத்திய வங்கியின் ஆளுநர் சக்திகாந்த் தாஸ் செய்தியாளர்கள் மாநாட்டில் தெரிவித்தார்.
ரிசர்வ் வங்கியின் பொருளியல் ஊக்குவிப்புச் செயல் திட்டத்தின்படி, வங்கிகளுக்கான குறுகிய கால கடன் வட்டி விகிதம் (ரெப்போ) 5.5%லிருந்து 4.4% ஆகக் குறைக்கப்படுகிறது.
இதனால் வீட்டுக்கடன் வட்டி குறைய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. வங்கிகள் கொடுத்த கடன் வசூலிப்பை 3 மாதம் நிறுத்திவைக்க ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது.
வங்கி வைப்புத் தொகைகளுக்கும் ரிசர்வ் வங்கி அளிக்கும் வட்டி விகிதம் 4% ஆகக் குறைக்கப்பட்டு உள்ளது. வங்கிகள் கடன் வழங்குவதை அதிகரிக்கவே இந்த நடவடிக்கை இடம்பெறுவதாக மத்திய வங்கி ஆளுநர் குறிப்பிட்டார்.
கொரோனா கிருமித்தொற்று காரணமாக ஏற்பட்டுவரும் பாதிப்பு கணிசமாக இருக்கும் என்று தெரிவித்த சக்திகாந்த் தாஸ், பொருட்களுக்கான தேவை பெரிதும் குறைந்துள்ளதாகவும் கச்சா எண்ணெய் விலை குறைந்திருப்பது பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் உதவிகரமாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.
நாட்டில் விளைச்சல் அமோகமாக உள்ளதால் வரும் நாட்களில் உணவுப் பொருட்களின் விலை குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளதாகவும் நிதி நிலையில் உறுதிப்பாட்டை பராமரிப்பதே பெரும் சவாலாக உள்ளது என்றும் அவர் கூறினார்.
நாடு முழுவதிலும் 21 நாள் ஊரடங்கு அமலில் உள்ளது. பொதுமக்கள் முதல் கூலித் தொழிலாளர்கள், தனியார் துறை ஊழியர்கள் என பல தரப்பினரும் வீடுகளுக்குள் முடங்கிவிட்டனர்.
அனைத்து தொழில் துறைகளும் நிலைகுத்திவிட்டன. மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது.
இதனால் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நிதி சலுகைகளை அளித்து வருகின்றன. ஏழைகள், பெண்கள், முதியோா், தொழிலாளா்கள் உள்ளிட்டோருக்கு உதவும் வகையில் ரூ.1.70 லட்சம் கோடி மதிப்பிலான சலுகைத் திட்டங்களை மத்திய அரசு வியாழக்கிழமை அறிவித்தது.
இந்நிலையில், ரிசர்வ் வங்கி 4 அம்ச ஊக்குவிப்பு திட்டத்தை அறிவித்து, வங்கிகளில் பணம் போட்டு வைத்திருப்பவர்களின் பணத்திற்கு முழு பொறுப்பு வழங்கப்படும் என்றும் உறுதி அளித்துள்ளது.