பெங்களூரு: கொரோனா கிருமி காரணமாக வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை கண்காணிக்க கர்நாடக மாநிலம் கைபேசி செயலி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. 14 நாட்கள் தனிமைப்படுத்தல் உத்தரவை ஏராளமானோர் மீறுவதாக வந்த புகார்களைத் தொடர்ந்து ‘Quarantine Watch’ என்னும் செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
தனிமைப்படுத்தப்பட்டவர்கள் இச்செயலியைப் பதிவிறக்கம் செய்து காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை மணிக்கு ஒரு தடவை செல்ஃபி படம் எடுத்து அரசாங்க மருத்துவ கண்காணிப்பு அமைப்புக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
அதிகாரிகள் அந்தப் படத்தை ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தைப் பயன் படுத்தி சரியான இடத்தில் இருந்து தான் படம் வந்துள்ளதா என சோதிப்பர். சந்தேகம் ஏற்பட்டால் அதிகாரிகள் விரைந்து சென்று விசாரணை நடத்துவர். வெளியிலிருந்து எடுக்கப்பட்ட படம் என தெரிய வந்தால் அதனை அனுப்பியவர் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தனிமைப் பகுதிகளில் அடைக்கப்படுவார்.
கர்நாடக மாநில மருத்துவ கல்வி அமைச்சர் டாக்டர் கே சுதாகர் இதனை விளக்கினார்.