புதுடெல்லி: இந்தியாவில் திங்கட்கிழமை கொவிட்-19 கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களைக் காட்டிலும் நேற்று முன்தினம் இரண்டு மடங்கு பாதிப்பு அதி கரித்துள்ளது. குறிப்பாக மகாராஷ்டிராவில் 82, தமிழ்நாட்டில் 57 பேர் ஒரேநாளில் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் அதிக பட்சமாக 320 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதைத் தொடர்ந்து கேரளாவில் 241 பேர், தமிழகத்தில் 124 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் இந்தியாவில் கிருமித்தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 1,637ஆக அதிகரித்துள்ளது.
கிருமித்தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கையும் 52 ஆகி விட்டது. நேற்று முன்தினம் மட்டும் 9 பேர் மாண்டனர். ஞாயிறு, திங்கள், செவ்வாய் ஆகிய மூன்று நாட்களில் புதிதாக 626 பேருக்கு கொரோனா கிருமி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது, சராசரியாக நாள் ஒன்றுக்கு 200 பேருக்கு கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. 21 நாள் ஊரடங்கு நடப்பில் இருக்கும் நிலையிலும் கிருமித் தொற்று அதிகரிப்பதற்கு பொது மக்களின் அலட்சியமே முக்கிய காரணம் என அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நோய்த்தொற்று தடுப்பில் பொதுமக்களின் ஒத்துழைப்பு குறைவாக உள்ளது என்று மத்திய சுகாதாரத் துறை இணைச் செயலா் லவ் அகா்வால் தெரிவித்தார். இதுதொடா்பாக, அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், “நாட்டில் கொவிட்டி-19 கிருமித்தொற்று பரவும் அபாயமுள்ள இடங்களின் எண்ணிக்கை திடீரென அதிகரித்து வருகின்றன. இதற்கு, பொதுமக்களின் ஒத்துழைப்பு குறைவாக உள்ளதும் அலட்சியப்போக்கும் முக்கிய காரணங்களாகும். கிருமித்தொற்றுக்கு எதிரான போரில் மக்களின் ஒருங்கிணைந்த ஆதரவு அவசியம். “கிருமிப் பரவலை தடுப்பதில் சமூக இடைவெளியை பின்பற்றுவது முக்கியமானது. அனைவருமே முகக்கவசம் அணிய வேண்டும் என்ற அவசியம் கிடையாது. “மருத்துவப் பணியாளா்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள், என்-95 முகக்கவசங்கள், சுவாசக் கருவிகள் உள்ளிட்டவை போதிய அளவில் கிடைப்பதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன,” என்றார் அந்த அதிகாரி.