புதுடெல்லி: புதுடெல்லியில் நடந்த தப்லீக் ஜமாத் கூட்டத்தில் பங்கேற்ற 960 வெளிநாட்டவர்களின் விசாவை மத்திய உள்துறை அமைச்சு ரத்துசெய்துவிட்டது.
அந்தக் கூட்டத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 1,300 வெளிநாட்டவர் பங்கேற்றனர். அவர்களில் 960 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். சுற்றுலா விசாவைப் பெற்று அதன் அடிப்படையில் இந்தியாவுக்கு வந்து புதுடெல்லி கூட்டத்தில் பங்கேற்றதால் அவர்கள் விசா விதிமுறைகளை மீறி இருக்கிறார்கள் என்று குற்றம்சாட்டப்பட்டது.
இதையடுத்து அவர்கள் கறுப்புப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களின் விசாவும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க உத்தர விடப்பட்டுள்ளதாகவும் மத்திய உள்துறை அமைச்சு செய்தியாளர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
இவ்வேளையில், அந்த மாநாட்டையொட்டி நாடு முழுவதிலும் மொத்தம் 9,000 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்களில் மாநாட்டில் கலந்துகொண்ட வெளிநாட்டவர்களும் மற்றவர்களும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் அடங்குவர் என்றும் உள்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
மாநாட்டில் கலந்துகொண்டு திரும்பியோரை அடையாளம் காணும் பணி தீவிரமாக நாடு முழுவதிலும் நடப்பதாகவும் அது தெரிவித்தது.
இதனிடையே, தப்லீக் ஜமாத் நிர்வாகிகள் 7 பேர் மீது பதிவான வழக்குகள் தொடர்பான விசாரணை தீவிரம் அடைந்துள்ளதாக ஊடகத் தகவல்கள் குறிப்பிட்டன.