தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்லும் நிலையில், மதுரையில் இதுவரை 60 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆண்டுதோறும் சித்திரை மாதம் மதுரையில் சித்திரை திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டிருக்கும்.
முக்கிய திருவிழாவான அழகர் ஆற்றில் இறங்கும் 'கள்ளழகர்' வைபவத்தில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கானவர்கள் கலந்துகொள்வர். கட்டுக்கடங்காத கூட்டம் அங்கு காணப்படும்.
கொரோனா கிருமிப் பரவலைத் தடுக்கும் நோக்கில் கூட்டம் கூடுவது அனுமதிக்கப்படுவதில்லை. நாடு முழுவதும் மே மாதம் 3ஆம் தேதி வரை ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ள நிலையில், மதுரை உட்பட 5 நகரங்களில் ஊரடங்கு மேலும் கடுமையாக்கப்பட்டது. அதனையடுத்து, தற்போது சித்திரைத் திருவிழா ரத்து செய்யப்பட்டு உள்ளது.
மதுரை அழகர்கோயிலில் சித்திரைப் பெருவிழா மே 3ல் தொடங்கி நடப்பதாக இருந்தது.
ஆனால் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக 'மண்டூக மகரிஷிக்கு மோட்சம் அளிக்கும்' நிகழ்ச்சி, புராணம் வாசித்தல் போன்ற சில வழிபாடுகள் மட்டும் www.tnhrce.gov.in என்ற இணையத்தளம், யூடியூப் மற்றும் ஃபேஸ்புக்கில் ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டது. இவ்விரு நிகழ்வுகளும் 08-5-2020 அன்று மாலை 4.30 முதல் 5 மணி வரை நேரலையாக ஒளிபரப்பப்படும் என்று ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பக்தர்கள் யாரும் கோவிலுக்குச் சென்று இந்த நிகழ்வுகளில் பங்கேற்க முடியாது என்பதால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே, மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் மற்றும் அது தொடர்பான மண்டகப்படி, ஊர்வலம் போன்ற நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதேபோல் அடுத்த மாதம் 4ஆம் தேதி நடக்க இருந்த திருவாரூர் ஆழித் தேரோட்டமும் ரத்ததானது.