புதுடெல்லி: இந்திய அரசாங்கம் வரும் ஆகஸ்ட்டுக்கு முன் கணிசமான அளவுக்கு அனைத்துலக விமானச் சேவையைத் தொடங்க முயலும் என்று விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்திப் சிங் புரி நேற்று தெரிவித்தார்.
உள்நாட்டு விமானச் சேவை மே 25 முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் நாட்டில் மே 31 வரை ஊரடங்கு விதிக்கப்பட்டு இருக்கிறது. இதை எல்லாரும் தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று அமைச்சர் வலியுறுத்தினார்.
கொரோனா கிருமித்தொற்று காரணமாக பல நாடுகளிலும் சிக்கி இருக்கும் இந்தியர்களைத் தாயகம் கொண்டு வருவதற்காக மத்திய அரசு சிறப்புத் திட்டத்தை நடப்புக்குக் கொண்டு வந்துள்ளது.
அந்தத் திட்டம் தொடங்கப்பட்டு முதல் 25 நாட்களில் சிறப்பு விமானங்கள் மூலம் ஏறக்குறைய 50,000 இந்தியர்கள் பல நாடுகளில் இருந்து தாயகம் கொண்டு வரப்படுவார்கள் என்றார் அமைச்சர்.
அந்தத் திட்டம் மே 7ஆம் தேதி தொடங்கப்பட்டது. கடந்த வியாழக்கிழமை வரை மொத்தம் 23,475 இந்தியர்கள் பல நாடுகளில் இருந்தும் இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்டனர்.
அத்திட்டத்தின் இரண்டாவது கட்டம் மே 22ஆம் தேதியுடன் முடிந்தது. அடுத்த கட்டம் ஜூன் 13 வரை தொடரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
மூன்றாவது கட்டத்தில் ஜெர்மனியின் பிராங்ஃபர்ட் நகரை மையமாக வைத்து இந்திய நாட்டவர்களுக்காகச் சிறப்பு விமானச் சேவைகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.