புதுடெல்லி: இந்தியாவில் நாளும் ஒரு சாதனையாக கொரோனா கிருமித்தொற்று தாறுமாறாகக் கூடி வருகிறது.
அந்த நாட்டில் கிருமித்தொற்று காரணமாக ஏற்படும் மரணங்கள் இதுவரையில் குறைவாகத்தான் உள்ளன என்றாலும் இனிமேல் கொவிட்-19க்குப் பலியாவோர் எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரிக்கக்கூடும் என்று வல்லுநர்கள் எச்சரித்து இருக்கிறார்கள்.
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, நீண்ட நெடும் கிருமி எதிர்ப்புப் போராட்டத்தை நாடு எதிர்நோக்கி இருக்கிறது என்று மக்களுக்கு எழுதிய ஒரு கடிதத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.
இந்திய மக்கள் அனைவரும் கட்டுப்பாட்டு விதிகளைக் கடுமையாகக் கடைப்பிடித்தாலொழிய கிருமியைக் கட்டுப்படுத்த முடியாது என்று குறிப்பிட்டு உள்ள பிரதமர், இந்தப் போராட்டத்தில் முழு ஒத்துழைப்பைத் தரும்படி மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொரோனா கிருமிப் பரவலைத் தடுப்பதற்காக இந்தியாவில் நான்கு கட்டங்களாக நடப்புக்கு வந்துள்ள கட்டுப்பாடுகள் இன்றுடன் முடிவடைகின்றன. இந்நிலையில், இதுவரை இல்லாத அளவுக்கு சனிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி மொத்தம் 173,763 பேரைக் கிருமி தொற்றிவிட்டதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவித்தன.
மொத்தம் 4,971 பேர் பலியாகிவிட்டார்கள். இதன் காரணமாக கட்டுப்பாடுகள் மேலும் நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, இந்தியாவிலேயே கொரோனா கிருமித்தொற்று அதிகம் உள்ள மகாராஷ்டிரா மாநிலத்தின் தலைநகரான மும்பையில் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு தொற்று பரவுவதாகத் தெரிகிறது.
மும்பையில் பல மருத்துவமனை வார்டுகளில் இறந்தவர்களைப் பெற உறவினர்கள் அஞ்சுவதால் உடல்கள் அப்படியே கிடப்பதாகவும் படுக்கைகள் இல்லாததால் தரையிலேயே படுத்துக்கிடக்கும்படி நோயாளிகளிடம் கூறப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுகாதாரப் பராமரிப்பு வசதிகள் அனைத்தும் கொரோனா நோயாளிகள் பக்கம் திரும்பி இருப்பதால் மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் இதர நோயாளிகளில் சிலர் மாண்டுவிட்டதாகவும் தெரிகிறது.
நாள்தோறும் புதுப்புது வார்டுகள் உருவாக்கப்படுகின்றன என்றாலும் ஒரே நாளில் அவை எல்லாம் நிரம்பிவிடுகின்றன என்று மத்திய மும்பையில் உள்ள கிங் எட்வர்ட் மருத்துவமனை மருத்துவர் சையது அகம்மது கூறுகிறார்.
மும்பையைப் பொறுத்தவரை சுகாதார வளங்கள் அறவே போதவில்லை என்று சம்பந்தப்பட்ட தரப்புகள் எச்சரிக்கை சங்கை ஊதி இருக்கின்றன.