பாரூச்: குஜராத் மாநிலத்தின் பாரூச் மாவட்டத்தில் உள்ள தாகேஜ் என்ற நகரில் செயல்பட்டு வந்த ரசாயனத் தொழிற்சாலையில் கொதிகலன் ஒன்று வெடித்ததில் எட்டு ஊழியர்கள் கொல்லப்பட்டனர். இதர 50 பேர் காயம் அடைந்துவிட்டதாக போலிஸ் கூறியது.
இந்தச் சம்பவம் புதன்கிழமை நிகழ்ந்தது. காயம் அடைந்தவர்களில் சிலரின் நிலைமை கவலை தருவதால் மரண எண்ணிக்கை கூடும் என்று தெரிவிக்கப்பட்டது.
விபத்து நிகழ்ந்த ஆலைக்கு அருகே இதர பல ரசாயன ஆலைகள் இருப்பதால் அந்த வட்டாரத்தைச் சேர்ந்த சுமார் 4,800 பேர் வேறு இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.
‘யஷாஸ்வி ரசாயன்’ என்ற அந்தத் தொழிற்சாலையில் கொள்கலன் வெடித்தபோது அங்கு சுமார் 230 பேர் வேலை பார்த்ததாக போலிசார் தெரிவித்தனர்.
கொள்கலன் வெடித்ததை அடுத்து பயங்கரமான தீ மூண்டது என்றும் தீயணைப்பாளர்கள் அரும்பாடுபட்டு தீயை அணைத்த பிறகு கருகிய நிலையில் ஆறு உடல்கள் காணப்பட்டதாகவும் போலிஸ் தெரிவித்தது. இரண்டு பேர் மருத்துவமனையில் மாண்டுவிட்டனர்.
காயம் அடைந்தவர்களில் 32 பேருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, இந்த விபத்துக்கு மாநில பாஜக அரசே காரணம் என்று காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான அகம்மது பட்டேல் தெரிவித்தார்.