லக்னோ: அண்மையில் உத்தரப்பிரதேச போலிசாரால் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட பிரபல ரவுடி விகாஸ் துபேயின் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளைப் பறிமுதல் செய்ய மத்திய அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தொடர்பாக உத்தரப்பிரதேச காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
விகாஸ் துபே மிகக் குறுகிய காலத்தில் கோடீஸ்வரர் ஆகியுள்ளார் என்றும் 14 முறை மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்கள் மூலம் ஹவாலா முறையில் அவர் பணம் சேர்த்துள்ளதாகவும் அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.
லக்னோவில் 23 கோடி ரூபாய் மதிப்பில் சொகுசு பங்களா ஒன்றை விகாஸ் வாங்கியுள்ளார். அந்நகரில் மட்டும் 16 அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளும் 11 பங்களாக்களும் உள்ளன. ஐக்கிய அரபு நாடுகளிலும் தாய்லாந்திலும் சொத்துகள் சேர்த்துள்ளார் என்று அமலாக்கத்துறை நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளதாக இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது.
விகாஸ் இறுதிச் சடங்கில் அவரது பெற்றோர் இருவரும் பங்கேற்கவில்லை. இதற்கு தங்கள் மகன் செய்த குற்றச்செயல்களே காரணம் என இருவரும் தெரிவித்துள்ளனர்.