இந்தியாவில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில் மகாராஷ்டிரா, தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் தொற்று எண்ணிக்கை பெருமளவு அதிகரித்து வருகிறது.
இன்று மேலும் 45,720 புதிய சம்பவங்கள் பதிவானதையடுத்து, அங்கு மொத்த எண்ணிக்கை 1,238,635 ஆக உயர்ந்துள்ளது.
புதிதாக 1,129 பேர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது; தினசரி பதிவான கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கையில் இது ஆக அதிகம்; இந்தியாவில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 29,861.
இதில் அதிகபட்சமாக தமிழகத்தில் 518 பேரும், மகாராஷ்டிராவில் 280 பேரும் உயிரிழந்தனர்.
தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 186,492 ஆகவும் குணமடைந்தோர் எண்ணிக்கை 131,583 ஆகவும் அதிகரித்துள்ளது.
டெல்லி சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின் படி, நேற்று 1,227 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த கிருமித்தொற்று எண்ணிக்கை 126,323 ஆக அதிகரித்துள்ளது.
ஆனால், டெல்லியில் கொரோனா கிருமி பரவியவர்களின் உண்மையான எண்ணிக்கை மிகமிக அதிகமாக இருக்கும் என்றும் டெல்லிவாசிகளில் கால்வாசிப்பேருக்கு கிருமித்தொற்று இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
தேசிய நோய்க்கட்டுப்பாட்டு மையம் டெல்லி மக்களிடம் ஆய்வு ஒன்றை நடத்தியது. வெவ்வேறு பகுதிகளில் இருந்து மொத்தம் 21,387 பேரிடமிருந்து ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டதில் 23.48 விழுக்காட்டினருக்கு கொரோனா கிருமித்தொற்று அறிகுறிகள் இருப்பது உறுதியாகியுள்ளது.
டெல்லியில் உள்ள மக்களில் 77 சதவிகிதம் பேருக்கு உடலில் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி இல்லை எனவும், அவர்கள் அனைவருக்கும் கொரோனா சுலபமாக பரவிவிடலாம் என்றும் அந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.