சிங்கப்பூர் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருந்த ‘ஹார்ட்ஸ் ஆஃப் ஹாரிஸ் 5.0’ இசைநிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.
அன்னையர் தினத்தன்று சிங்கப்பூர் உள்விளையாட்டு அரங்கத்தில் அந்நிகழ்ச்சி நடைபெறவிருந்தது.
ஏற்பாட்டாளரான ‘ஷிராஸ் புரோஜெக்ட்ஸ்’ சமூக ஊடகங்களில் மே 5ஆம் தேதி பிற்பகல் சுமார் 3 மணிக்கு இந்தத் தகவலைப் பதிவிட்டது.
“பெரும் துக்கத்துடன் நாங்கள் இச்செய்தியைத் தெரிவிக்கிறோம். இந்த முடிவை நாங்கள் நன்கு சிந்தித்துத்தான் எடுத்தோம். எங்கள் கட்டுப்பாட்டுக்கு மீறிய தற்போதைய சூழலில் இதுதான் பொறுப்பான முடிவு என நினைக்கிறோம்,” என அப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நுழைவுச்சீட்டுகள் வாங்கியவர்களுக்கு பணம் திருப்பிக் கொடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. பணத்தைத் திரும்பப் பெற, 30 முதல் 60 வேலை நாள்கள் வரை மக்கள் காத்திருக்க வேண்டும் என ‘சிஸ்டிக்’ கூறியது.
இந்நிகழ்ச்சி ஏற்கெனவே ஒருமுறை ஒத்திவைக்கப்பட்டது. மே 4ஆம் தேதி கரையோரப் பூந்தோட்டங்களில் நடைபெறும் என முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது. அப்போதே அதிக விலை, நின்றுகொண்டே பார்க்கவேண்டிய கட்டாயம் ஆகியவை குறித்து சிலர் வருத்தம் தெரிவித்திருந்தனர்.
முன்னதாக, கடந்த மார்ச் 2ஆம் தேதி சன்டெக் கண்காட்சி மையத்தில் நடைபெறவிருந்த ‘சரும்புன் பர்டான்சா’ நிகழ்ச்சியையும் ‘ஷிராஸ்’ ரத்துசெய்தது.
“நிகழ்ச்சியைக் காண என்னுடைய நண்பர்கள் கனடாவிலிருந்து வரத் திட்டமிட்டிருந்தனர். இச்செய்தியை அறிந்ததும் என் நண்பர்களும் இணையத்தில் பலரும் தங்கள் கோபத்தையும் கவலையையும் தெரிவித்துள்ளனர்.
“நிகழ்ச்சியை மேடை ஏற்ற முடியாவிட்டாலும் நுழைவுச்சீட்டுக் கட்டணத்தைத் திருப்பித் தருவதற்கு ஏற்பாட்டாளர்கள் உடனடி நடவடிக்கை மேற்கொள்வர் என்று நம்புகிறோம்,” என்றார் ரச்சனா வே, 26.
“நிகழ்ச்சி நடைபெறுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு அது ரத்துசெய்யப்பட்டது மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எங்கள் ஏற்பாடுகளை இனி நாங்கள் மாற்றவேண்டும்,” என்றார் ராகவேந்தரா, 29.
ரத்து செய்யப்பட்டதற்கான தெளிவான காரணம் பதிவில் குறிப்பிடப்படவில்லை. அதன் தொடர்பில் மேல்விவரங்களுக்கு ‘ஷிராஸ் புரோஜெக்ட்ஸ்’ நிறுவனத்தைத் தமிழ் முரசு அணுகியுள்ளது.
“ரத்துக்கான தெளிவான காரணத்தைக் குறிப்பிடாதது மேலும் ஏமாற்றம் ஏற்படுத்தியுள்ளது. தமிழ் இசையில் நாம் ஓர் உலகத் தர மையம் என்ற நற்பெயரை இது பலவீனப்படுத்துகிறது,” என்றார் ரசிகர் ஒருவர்.
மே 25ஆம் தேதி, மலேசியாவின் புக்கிட் ஜலீல் தேசிய அரங்கில் நடைபெறவுள்ள ‘ஹார்ட்ஸ் ஆஃப் ஹாரிஸ் 6.0’ இசைநிகழ்ச்சி பாதிக்கப்படுமா என்பது குறித்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை.