புதுடெல்லி: ஏர் இந்தியா விமான நிறுவனம் தேவைக்கு மேற்பட்ட ஊழியர்களுக்கு ஆறு மாதங்கள் முதல் ஐந்தாண்டு காலம் வரை ஊதியமின்றி கட்டாய விடுப்பில் அனுப்பத் திட்டமிட்டுள்ளது.
அப்படி விடுப்பில் அனுப்பப்படும் ஊழியர்களை அடையாளம் காண்பதற்காக ஏர் இந்தியா நிறுவனம் குழு ஒன்றை அமைத்துள்ளது. அந்தக் குழு அடுத்த மாதம் 11ஆம் தேதி மறுஆய்விற்காகத் தனது அறிக்கையைத் தாக்கல் செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே, விமானிகள் உள்ளிட்ட விமானச் சிப்பந்திகளின் ஊதியம் கிட்டத்தட்ட 40% குறைக்கப்பட்டுள்ளது. ஆனால், விமானிகளைப் பொறுத்தமட்டில் ஊதியக் குறைப்பு 85% வரை இருப்பதாக விமானச் சிப்பந்திகள் கூறினர். இவ்வாண்டு ஏப்ரல் 1ஆம் தேதியில் இருந்து என பின்தேதியிட்டு ஊதியக் குறைப்பு நடவடிக்கை இடம்பெறுகிறது. ரூ.25,000 வரை மாத ஊதியம் பெறுவோருக்கு ஊதியக் குறைப்பு இருக்காது.