புதுடெல்லி: பிரான்சிடம் இருந்து இந்தியா ரஃபேல் விமானங்களை வாங்கியுள்ளது. முதற்கட்டமாக ஐந்து விமானங்கள் பிரான்சில் இருந்து இந்தியா நோக்கிப் புறப்பட்டுள்ளன.
இந்திய விமானப்படையை நவீனப்படுத்தும் வகையில் ரஃபேல் போர் விமானங்களை வாங்க பல ஆண்டுகளாக பேச்சுவார்த்தை நடந்தது. இதன் அடிப்படையில் இந்தியாவுக்கும் பிரான்சுக்கும் ஒப்பந்தம் கையெழுத்தாகியது.
முதற்கட்டமாக ஐந்து ரஃபேல் போர் விமானங்கள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்திய விமானப்படை விமானிகள் பிரான்ஸ் சென்று விமானங்களைக் கொண்டு வருகின்றனர். பிரான்சில் இருந்து நேற்று புறப்பட்ட விமானங்களை பிரான்சுக்கான இந்தியத் தூதர் வழியனுப்பி வைத்தார்.
அங்கிருந்து புறப்பட்ட விமானங்கள் ஐக்கிய அரபு சிற்றரசுகளில் உள்ள அல்தர்ஸா விமானப்படை தளத்தில் தரையிறக்கப்படும். அங்கு செல்லும் வரை தேவையான எரிபொருளை பிரான்ஸ் விமானப்
படையின் எரிபொருள் டேங்க் விமானம் வழங்கும். ஐக்கிய அரபு சிற் றரசுகளில் ஓய்வுக்குப் பிறகு எரிபொருள் நிரப்பப்பட்டு நாளை (ஜூலை 29) பஞ்சாப் மாநிலம் அம்பாலா விமானப்படை தளத்தை வந்து சேரும். அதன் பின்னர் இந்திய விமானப் படையில் அவை முறைப்படி சேர்ப்பதற்கான நடைமுறைகள் தொடங்கும்
முன்னதாக இந்திய விமானப்படை வீரர்கள் 12 பேருக்கு ரஃபேல் போர் விமானங்களை இயக்குவது தொடர்பான பயிற்சியை பிரான்ஸ் வழங்கியிருந்தது. அவர்கள்தான் தற்போது விமானத்தை பிரான்ஸிலிருந்து இந்தியாவுக்கு எடுத்து வருகின்றனர்.
கடந்த 2016 செப்டம்பர் மாதத்தில் ரூ.58 ஆயிரம் கோடி செலவில் 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவது தொடர்பாக இந்தியா- பிரான்சு அரசுகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. கடந்த ஆண்டு அக்டோபர் 8ஆம் தேதி, முதலாவது ரஃபேல் விமானத்தை தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரான்சிடம் இருந்து பெற்றுக்கொண்டார். 36 ஜெட் விமானங்களில் 30 போர் விமானங்கள். எஞ்சிய 6 பயிற்சி விமானங்கள்.
எல்லையில் சீனா அத்துமீறி வரும் நிலையில் அதனை எதிர்ப்பதற்கு தகுதியான ஆயுதங்களில் ஒன்றாக ரஃபேல் போர் விமானங்கள் கருதப்படுகின்றன.