ஹைதராபாத்: கொரோனா புண்ணியத்தில் 51 வயது ஆடவர் 33 ஆண்டுகளுக்குப் பிறகு 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
ஹைதராபாத்தைச் சேர்ந்த நூருதீன் கடந்த 1987ஆம் ஆண்டு முதன்முதலாக பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதினார். அப்போது அவரால் ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற முடியவில்லை.
அதன் பின்னர் ஒவ்வோர் ஆண்டும் தவறாமல் தேர்வு எழுதி வந்தபோதிலும் தேர்ச்சி பெறத் தேவையான 35 மதிப்பெண்களை அவரால் எடுக்க முடியவில்லை.
இந்தாண்டு அனைத்துப் பாடங்களையும் எழுத வேண்டும் என கல்வித்துறை அதிகாரிகள் கூறியதை அடுத்து தேர்வுக்கான விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தியிருந்தார் நூருதீன்.
தேர்வு எழுத காத்திருந்த வேளையில் கொரோனா விவகாரத்தால் தெலுங்கானாவில் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதன்மூலம் நூருதீன் 33 ஆண்டுகளுக்குப் பிறகு தேர்வெழுதாமலேயே 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார்.