புதுடெல்லி: இரு நாடுகளின் எல்லைப் பகுதிகளில் இருந்து சீனா தனது துருப்புக்களை திரும்பப் பெறாதவரை இந்திய வீரர்களும் பின்வாங்க மாட்டார்கள் எனத் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைய சில வாரங்களாக இந்திய-சீன எல்லைப் பகுதியில் கடும் பதற்றம் நிலவுகிறது. குறிப்பாக லடாக் பகுதியில் இருதரப்புக்கும் இடையே திடீர் மோதல் வெடித்தது. இதில் இந்தியத் தரப்பில் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீனாவுக்கு இரட்டிப்பு உயிர்ச்சேதம் ஏற்பட்டது.
இதையடுத்து இருதரப்புக்கும் இடையே இதுவரை ஐந்து முறை பேச்சுவார்த்தை நடந்துள்ளது. இந்தியா எல்லைப் பகுதியில் புதிய சாலை அமைப்பதற்கு சீனா கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. மேலும் இந்திய விமானங்களின் கண்காணிப்புப் பணி குறித்தும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது.
எனினும் எல்லையில் சீனா கடந்த பல ஆண்டுகளாக கட்டுமானப் பணிகளை மேற்கொள்வது இந்தியத் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது. சீனா முன்பு எந்தப் பகுதியில் தன் படைகளை நிறுத்தி இருந்ததோ அதுவரை படைகளைப் பின்வாங்க வேண்டும் என்பது இந்தியாவின் வலியுறுத்தலாக உள்ளது.
இதற்கிடையே குளிர்காலம் நெருங்குவதை அடுத்து லடாக் எல்லைப் பகுதியில் தனது வீரர்களுக்குத் தேவையான பொருட்களைக் குவிப்பதில் இந்தியா முனைப்பு காட்டி வருகிறது. இது கிட்டத்தட்ட ஒவ்வோர் ஆண்டும் சியாச்சின் பகுதியில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கையை ஒத்து இருப்பதாக இந்திய ஊடகம் தெரிவிக்கிறது.
இருதரப்பு எல்லையில் உள்ள பகுதிகளில் பதற்றம் நீடித்து வந்தாலும் இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என சீன வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தி உள்ளார்.
ஆனால், எல்லைப் பிரச்சினையையும் இரு நாடுகளுக்கு இடையேயான எதிர்கால உறவுகளையும் பிரித்துப் பார்க்க இயலாது என்றும் இதுவே உண்மை நிலை என்றும் இந்திய வெளியுறவு அமைச்சு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.