புதுடெல்லி: கொரோனா கிருமித்தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இந்தச் சவாலான சூழ்நிலையை எல்லா மாநிலங்களும் எதிர்கொண்டு வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்துவதில் ஒவ்வொரு மாநிலமும் தனித்துவத்தைக் கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பத்து மாநிலங்களின் முதல்வர்களுடன் நேற்று காலை காணொளி வசதி மூலம் அவர் கொரோனா விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தினார். இதில் தமிழக முதல்வர் பழனிசாமியும் பங்கேற்றார்.
அப்போது பேசிய பிரதமர் மோடி, கொரோனா தடுப்பு நடவடிக்கையில் இந்தியா சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டார். இதனால் நோயாளிகள் இறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
கொவிட்-19 நோயிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்றும் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட நபரை 72 மணி நேரத்துக்குள் அடையாளம் கண்டால் பாதிப்பின் அளவை வெகுவாகக் குறைக்கலாம் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
“இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ள பத்து மாநிலங்கள் ஒருங்கிணைந்து ஆலோசித்து முடிவெடுக்க வேண்டிய தேவை உள்ளது. ஒவ்வொருவரின் அனுபவங்களில் இருந்தும் நாம் கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. இந்த பத்து மாநிலங்களில் கொரோனாவை வென்று விட்டால், தேசம் கொரோனாவை வெல்லும்,” என்றார் பிரதமர் மோடி.
சுகாதார பணியாளர்கள் ஒவ்வொரு நாளும் புதிய சவால்களை எதிர்கொள்வதாகக் குறிப்பிட்ட அவர், இந்தப் போராட்டத்தில் மாநிலங்களின் பங்கு இன்றியமையாதது என்றார்.
ஒவ்வொரு மாநிலமும் போராடி வருவதாகவும், பாதிப்பு குறைவது ஒட்டுமொத்த முயற்சிக்கு கிடைத்த வெற்றி என்றும் பிரதமர் மேலும் தெரிவித்தார். மக்களிடம் விழிப்புணர்வு அதிகரித்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.