ஐ.நா.வின் மகளிர் ஆணையத்துக்கான உறுப்பு நாடுகளைத் தேர்ந்தெடுக்க நடைபெற்ற தேர்தலில் சீனாவை வீழ்த்தியுள்ளது இந்தியா.
பாலின சமத்துவம், மகளிர் முன்னேற்றம் தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் மகளிர் ஆணையத்தில் 54 நாடுகள் உறுப்பியம் பெற்றுள்ளன.
இந்நிலையில் ஆசிய பசிபிக் வட்டார நாடுகளிலிருந்து இரண்டு உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. இதில் சீனா, இந்தியா, ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று நாடுகள் போட்டியிட்டன.
இதில் கடும் போட்டிக்கு மத்தியில் பதிவான 54 வாக்குகளில், இந்தியா 38 வாக்குகளைப் பெற்றது. ஆப்கானிஸ்தான் 39 வாக்குகளைப் பெற்றதை அடுத்து சீனா தோல்வி கண்டது.
ஐ.நா. பாதுகாப்பு மன்றத்தின் நிரந்தர உறுப்பினராக இருக்கும் சீனாவுக்கு 27 வாக்குகள் மட்டுமே கிடைத்தன.
இந்தியா வெற்றி பெற்றதை அடுத்து ஆதரவளித்த நாடுகளுக்கு நன்றி தெரிவித்து, ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி டி.எஸ். திருமூர்த்தி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
ஐநா பாதுகாப்பு மன்றத்தில் நிரந்தர உறுப்பினராக இடம்பெறுவதற்கு இந்தியா தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இத்தகைய சூழலில் இந்தியா பெற்றுள்ள இந்த வெற்றி உலக நாடுகளின் பார்வையை இந்தியா பக்கம் திருப்பி உள்ளது.