இந்திய அதிபர், பிரதமர் உட்பட 10,000க்கும் மேற்பட்டோரை சீன நிறுவனம் உளவு பார்த்ததாக புகார் கிளம்பியதை அடுத்து அது பற்றி விசாரிக்க மத்திய அரசு சிறப்புக் குழுவை நியமித்துள்ளது.
அதிபர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்தே, 5 முன்னாள் பிரதமர்கள், 40 முன்னாள், இந்நாள் முதல்வர்கள், 350 எம்பிக்கள் உட்பட சுமார் 10,000 இந்திய தலைவர்களை சீனாவைச் சேர்ந்த சின்ஹுவா நிறுவனம் உளவு பார்த்திருப்பதாக சில நாட்களுக்கு முன்பு பரபரப்பு கிளம்பியது.
டுவிட்டர், ஃபேஸ்புக், லிங்க்டின், இன்ஸ்டாகிராம், டிக் டாக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலமாக இந்திய தலைவர்களின் தகவல்களை சீன நிறுவனம் திருடிவிட்டதாக கூறப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக மாநிலங்களவை காங்கிரஸ் தலைவர் வேணுகோபால், மாநிலங்களவையில் கேள்வி எழுப்பி இதுதொடர்பாக வெளியுறவு அமைச்சருக்குக் கடிதம் அனுப்பினார்.
இதற்குப் பதில் அளித்த வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், “இந்திய தலைவர்களை சீன நிறுவனம் வேவு பார்த்தது தொடர்பாக விசாரணை நடத்த நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் தேசிய இணையப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் இந்தக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறினார்.