மும்பை: இந்தி நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணம் தொடர்பான விசாரணை இன்னும் முடிவடையவில்லை என சிபிஐ தெரிவித்துள்ளது.
சுஷாந்த் தற்கொலை செய்துகொண்டதாக முதலில் கூறப்பட்டது. எனினும் பின்னர் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனும் சந்தேகம் எழுந்ததை அடுத்து இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.
சிபிஐ மேற்கொண்ட விசாரணையின்போது சுஷாந்த் சிங் போதைப் பொருட்கள் பயன்படுத்தியதும் அவரது காதலி ரியா சக்கரபோர்த்தி அவருக்குப் போதைப் பொருளை வாங்கித் தந்ததும் அம்பலமானது.
மேலும் இந்தித் திரையுலகைச் சேர்ந்த பல பிரபலங்களுக்கு போதைப்பொருள் பயன்படுத்தும் பழக்கம் இருப்பதாக தகவல் வெளியானது.
இதையடுத்து சிபிஐ அதிகாரிகளும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளும் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
நடிகைகள் தீபிகா படுகோன், ரகுல் பிரீத்சிங் உள்ளிட்ட நடிகைகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
ரியா சக்கரபோர்த்தி போதைப்பொருள் கும்பலின் தீவிர உறுப்பினர் என்று போதைப்பொருள் தடுப்புப் பிரிவு, நீதிமன்றத்தில் தெரிவித்தது.
தமக்குப் பிணை வழங்கக் கோரி ரியா நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனு மீதான விசாரணையின்போதே சிபிஐ தரப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே கன்னடத் திரை உலகிலும் பலருக்குப் போதைப் பொருள் பயன்படுத்தும் பழக்கம் உள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக நடிகைகள் ராகினி, சஞ்சனா ஆகியோரும் கைதாகியுள்ளனர்.
அவர்கள் இருவரும் தாக்கல் செய்த பிணை மனுக்களை பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக பெங்களூரு போலிசார் இதுவரை 14 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மேலும் தலைமறைவாக உள்ள சிலரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தி உள்ளனர்.