கர்நாடகாவில் உள்ள பள்ளிகளுக்கு மூன்று வார காலம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு அதிகம் இருப்பதால் ஆசிரியர்கள், மாணவர்களின் நலன் கருதி நேற்றுமுதல் வரும் 30ஆம் தேதி வரை மூன்று வாரங்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளதாக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 700,786 ஆக உயர்ந்துள்ளது. இத்தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 9,966ஆக அதிகரித்துள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இந்நிலையில், இத்தொற்று பரவும் வேகம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், பள்ளிகள் திறக்கப்பட்டால் மாணவர்கள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக சமூக ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.
கர்நாடகாவில் ‘வித்யகமா’ என்ற திட்டத்தின்கீழ் கிராமப்புறங்களில் கல்வி கற்றுத் தரப்படுகிறது. இதுபோல் அங்கு கல்வி பயின்ற 34 பேர் இத்தொற்றால் பாதிக்கப்பட்டிருப் பது உறுதியாகி உள்ளது.
“மாநிலத்தில் பரவும் கிருமித் தொற்றால் மாணவர்கள், ஆசிரியர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களது நலனைக்கருத்தில் கொண்டு இப்போது முதல் வரும் 30ஆம் தேதி வரையில் மூன்று வார காலத்திற்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்,” என்று முதல்வர் எடியூரப்பா கூறியுள்ளார்.
இதற்கிடையே, இந்தியாவில் இத்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 71 லட்சத்தைக் கடந்துள்ள நிலையில், 61.49 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 66,732 பேருக்கு கிருமி பரவியுள்ளது. ஆனாலும் இந்த புதிய பாதிப்பு குறைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.