கொலைக் குற்றம் சாட்டப்பட்ட 20 வயது பெண் ஒருவர், மத்தியப் பிரதேசம் ரேவா மாவட்டத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் 10 நாட்களாக பலரால் பாலியல் ரீதியாக சீரழிக்கப்பட்டதாக அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார்.
கடந்த மே மாதத்தில் இந்தச் செயல் நடந்ததாகக் குறிப்பிடும் அந்தப் பெண்ணை இம்மாதம் 10ஆம் தேதி சிறையில் பார்க்கச் சென்ற கூடுதல் மாவட்ட நீதிபதி, வழக்கறிஞர்கள் ஆகியோரிடம் அவர் இந்தப் புகாரைத் தெரிவித்தார்.
அந்தப் படுபாதகச் செயலில் போலிஸ் உயரதிகாரி, அந்தக் காவல் நிலையத்தின் பொறுப்பு காவலர், மூன்று கான்ஸ்டபிள்கள் ஆகியோர் ஈடுபட்டதாகவும் இது குறித்து வெளியில் சொல்லக்கூடாது என தன்னை அச்சுறுத்தியதாகவும் அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.
இந்தக் குற்றத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்த பெண் காவலரை அவரது மேலதிகாரிகள் சரிக்கட்டியதாகவும் கூறப்பட்டது.
தவறிழைத்ததாகக் கூறப்படும் காவல்துறை அதிகாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு நீதிபதி ஆணையிட்டதாகக் கூறப்பட்டாலும், ரேவா காவல் கண்காணிப்பாளர் ராகேஷ் சிங், அதன் தொடர்பில் எந்த தகவலும் கிடைக்கவில்லை என்றார்.
கடந்த மே மாதம் 9 முதல் 21ஆம் தேதி வரை தாம் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகக் குறிப்பிட்டுள்ளார். ஆனால், காவல் நிலைய ஆவணங்களின்படி, மே மாதம் 21ஆம் தேதி, அதாவது அந்தப் பெண் செய்ததாகக் கூறப் படும் கொலை நிகழ்ந்த 5 நாட்களுக்குப் பிறகு கைது செய்யப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்தப் பெண்ணின் கைபேசி இருந்த இடத்தின் அடிப்படையில் பெறப்பட்ட தகவல்களில் மே மாதம் 16ஆம் தேதி வரை அவர் அந்த காவல் நிலையத்திலிருந்து 20 கி.மீ. தொலைவுக்குள் இருந்தது தெரியவந்துள்ளது.
தமக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து 3 மாதங்களுக்கு முன்பே சிறை அதிகாரியிடம் தெரிவித்ததாக அந்தப் பெண் குறிப்பிட்டார்; ஆனால், அதை நம்பவில்லை என சிறை அதிகாரி தெரிவித்துள்ளார்.