புதுடெல்லி: எல்லையில் படைகளைக் குவிக்கும் நடவடிக்கைக்கு மத்தியில் இந்தியா, சீனா இடையே எட்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.
ராணுவ உயர் அதிகாரிகள் இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க உள்ளனர்.
இந்திய சீன எல்லைப் பகுதியில் கடந்த ஐந்து மாதங்களாக தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இருதரப்பு வீரர்களும் மோதிக்கொண்டதில் உயிரிழப்புகளும் ஏற்பட்டன.
லடாக் யூனியன் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம் ஆகிய இரண்டையும் இந்தியாவுக்கு உட்பட்ட பகுதிகளாக ஏற்க இயலாது என சீனா தெரிவித்துள்ளது. அதற்கு இந்தியாவின் உள் விவகாரங்களில் தலையிட உரிமை இல்லை என மத்திய அரசு பதிலடி கொடுத்தது.
சீனா போருக்குத் தயார் என்றால் 130 கோடி மக்கள் தொகையைக் கொண்ட இந்தியாவும் போருக்குத் தயார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சீனாவுக்குப் பதிலடி கொடுத்துள்ளார்.
இரு நாடுகளுமே எல்லையில் ஆயிரக்கணக்கான வீரர்களையும் நவீன ஆயுதங்களையும் குவித்துள்ளன.
மோதலை அடுத்து பதற்றத்தைக் குறைக்கும் வகையில் இரு நாடுகளையும் சேர்ந்த ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். பிரச்சினைக்குத் தீர்வு காண இதுவரை ஏழு சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடந்து முடிந்துள்ள நிலையில் எட்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
இதில் இந்திய ராணுவத்தின் 14வது படைப்பிரிவு கமாண்டர் லெப்டினென்ட் ஜெனரல் பி.ஜி.கே. மேனன் பங்கேற்கிறார். மத்திய வெளியுறவு இணைச் செயலாளர் நவீன் ஸ்ரீவஸ்தவாவும் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எல்லையில் வீரர்களின் எண்ணிக்கையைக் குறைக்கவேண்டும், ஆயுதங்களை அகற்ற வேண்டும் என இந்தியத் தரப்பு வலியுறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.