மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கொவிட்-19 நோயாளி ஒருவரை கடந்த 14 நாட்களாகக் காணவில்லை. இது குறித்து போலிசில் புகரும் அளிக்கப்பட்டது.
ஆனால், 27 வயதான சூரியபான் யாதவ் எனும் அந்த இளையரின் சடலம் அதே மருத்துவமனையின் கழிவறையில் அழுகிச் சிதைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
காச நோய்த்தொற்று இருந்த அவருக்கு கொவிட்-19 பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, செப்டம்பர் 30ஆம் தேதி முதல் சிகிச்சை அளிக்கப்பட்டது.
மருத்துவமனையின் மூடப்பட்டிருந்த ஒரு கழிவறையிலிருந்து கடந்த 18ஆம் தேதி துர்நாற்றம் வந்ததை அடுத்து அந்தக் கழிவறையை அதிகாரிகள் சோதித்தனர்.
உடல் முற்றிலும் அழுகிச் சிதைந்திருந்த நிலையில் மாண்டவரின் பாலினத்தைக் கண்டுபிடிப்பதுகூட சிரமமாக இருந்ததாகக் கூறப்பட்டது.
மும்பையின் சேவாரியில் இருக்கும் காசநோய் மருத்துவமனையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. மருத்துவமனையில் சேரும்போது தனது சரியான விலாசத்தை அவர் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
மருத்துவமனையின் முதல் மாடியில் ஆண்கள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த அவர், அக்டோபர் மாதம் 4ஆம் தேதியன்று, கழிவறைக்குச் சென்றபோது மூச்சுவிட முடியாமல் மயங்கிச் சரிந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்தச் சம்பவத்தின் தொடர்பில் உயர்நிலை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மருத்துவமனையின் குறிப்பிட்ட வார்டை சேர்ந்த குறைந்தபட்சம் 40 ஊழியர்களுக்கு அறிவிப்பும் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், சூரியபானின் மரணம் இயற்கையான காரணங்களால் நிகழ்ந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
பொதுவாக, கழிவறைகள் தினமும் 3 முறை சுத்தப்படுத்தப்படும் என்று குறிப்பிடும் ஊழியர்கள், கழிவறை மூடப்பட்டிருந்தால், துப்புரவாளர்கள் அவற்றைப் பின்னர் கழுவ எண்ணி சென்றுவிடுவார்களாம்.
மேலும், கொவிட்-19 நோயாளிகள் இருக்கும் பகுதி என்பதால் அந்த வார்டு ஊழியர்கள் தவிர மற்ற ஊழியர்களும் போலிசரும் கூட அங்கு செல்ல தயக்கம் காட்டுவதாகத் தெரிவிக்கப்பட்டது.