சீனாவையும் பாகிஸ்தானையும் இந்தியா தைரியமாக எதிர்கொள்ளும் என உத்தரப் பிரதேச மாநில பாஜக தலைவர் ஸ்வதேந்திர தேவ் சிங் தெரிவித்துள்ளார்.
மேலும் அவ்விரு நாடுகளுடன் போர் தொடுப்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டிருப்பது சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.
நேற்று முன்தினம் பாஜக எம்எல்ஏ வீட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், ராமர் கோவில் மற்றும் காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அங்கீகாரம் தொடர்பாக முடிவு எடுத்தது போல், போர் தொடுக்கும் விஷயத்திலும் பிரதமர் மோடி முன்பே முடிவெடுத்துவிட்டதாக கூறினார்.
மேலும், சமாஜ்வாதி கட்சி மற்றும் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளின் தொண்டர்களை பயங்கரவாதிகளுடன் ஒப்பிட்டும் அவர் பேசினார்.
ஸ்வதேந்திர தேவ் சிங்கின் பேச்சுக்கு எதிர்க்கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சீனாவுடன் அமைதியான உறவையே இந்தியா விரும்புகிறது என்றும் இருதரப்புக்கும் இடையேயான பதற்றத்தைக் குறைப்பதற்கான முயற்சிகள் நீடிப்பதாகவும் மத்திய தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அண்மையில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சீனாவுடன் போர் தொடுப்பது குறித்து பாஜக மாநிலத் தலைவர் பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து பாஜக தலைமை கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.