இந்தியாவுடனான எல்லைப் பிரச்சினையில் மூன்றாம் தரப்புக்கு அறவே இடமில்லை என சீனா தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக டெல்லியில் உள்ள சீனத் தூதரகம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், எல்லைப் பிரச்சினை என்பது இருதரப்புக்கு மட்டுமே உரிய விவகாரம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய மக்கள் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதாகவும் அமெரிக்கா இந்திய மக்களுடன் நிற்கும் என்றும் அமெரிக்க வெளியுறவு அமைச்சு அண்மையில் தெரிவித்திருந்தது.
இது சீனத் தரப்புக்குக் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்தே சீனத் தூதரகத்தின் அறிக்கை வெளியானது.
“இந்தியா, சீனா இடையேயான எல்லைப் பிரச்சினையில் மூன்றாம் தரப்பு தலையிடும் பேச்சுக்கே இடமில்லை. இந்தியாவும் சீனாவும் தங்களுக்கு இடையே உள்ள வேறுபாடுகளைத் தீர்த்துக்கொள்ளும். எனவே, சீனா குறித்து தவறான தகவல்களைப் பரப்பும் வேலையை அமெரிக்கா நிறுத்திக்கொள்ள வேண்டும்,” என சீனா வலியுறுத்தி உள்ளது.
இதற்கிடையே பயங்கரவாதத்திற்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்குமாறு பாகிஸ்தானுக்கு இந்தியா, அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது.