இந்தியா- சீனா எல்லையில் லடாக் பகுதியை ஒட்டிய கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் கடந்த ஜூன் 15ஆம் தேதி இரு நாட்டு வீரர்களுக்கும் இடையில் மோதல் நடந்தது. அதில் இந்திய வீரர்கள் 20 பேர் மாண்டனர்.
சீனா தரப்பில் எவ்வளவு பேர் பலியாயினர் என்பது அதிகாரபூர்வமாகத் தெரியவில்லை. இந்தச் சம்பவத்தை அடுத்து எல்லையில் அமைதியை ஏற்படுத்த இரு தரப்புகளும் முயன்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இருதரப்பிலும் எல்லையில் படைகளைக் குறைப்பதற்காக உயர் அதிகாரிகள் மட்டத்திலான பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், ‘கல்வான் பள்ளத்தாக்கு மோதல் சீனாவின் திட்டமிட்ட செயல்’ என அமெரிக்க உயர்நிலைக் குழு ஒன்று தெரிவித்திருக்கிறது.
கிட்டத்தட்ட 50 ஆண்டுகளில் முதன் முதலாக சீன - இந்திய எல்லையில் உயிர்ப்பலி சம்பவத்தை சீனா நடத்தி இருக்கிறது என்று அமெரிக்க நாடாளுமன்றக் குழு ஆணையம் அறிக்கையில் தெரிவிக்கிறது.
“சீனா தன்னுடைய ராணுவ படைபலத்தை அமைதிக் காலத்தில் பயன்படுத்துகிறது. தைவான், தென்சீனக் கடல் பகுதியில் மிரட்டல் விடுக்கும் அளவில் பெரிய பயிற்சிகளை நடத்துகிறது,” என்று அமெரிக்க - சீன பொருளியல் பாதுகாப்பு மறுபரிசீலனை ஆணையம் என்ற அந்த அமைப்பு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
“இந்த ஆண்டில் இந்தியாவுடனான தனது எல்லையில் முதல் உயிர்ப்பலி தாக்குதலை அரங்கேற்றி அதன் மூலம் கோப மூட்டும் செயலை சீனா செய்துள்ளது. சீனாவின் ஆக்கிரமிப்பு காரியங்கள் எல்லாம் கண்காணிக்கப்பட்டு வருகின்றன என்று அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
“தனது பக்கத்து நாடுகளுடன் எல்லையில் ராணுவப் பதற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் தனக்குத் தேவையானவற்றைச் சாதித்துக்கொள்ள சீனா முயற்சிக்கிறது,” என்று கூறப்பட்டுள்ளது.
கடல் மட்டத்திலிருந்து 15,000 அடி உயரத்திலுள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா- சீனா இடையில் நிலவும் பதற்றம் உலக கவனத்தை ஈர்த்துள்ளது.