இந்தியாவின் ஆறு மாநிலங்களில் கொரோனா கிருமித்தொற்று மீண்டும் அதிகரித்து வருவதாக இந்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் இந்தியா முழுவதும் மேலும் 15,510 பேருக்கு கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது.
இவர்களில் சுமார் 87.25 விழுக்காட்டினர் தமிழகம், மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, குஜராத், பஞ்சாப் ஆகிய ஆறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.
இதையடுத்து, கிருமித்தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆறு மாநிலங்களுடன் மத்திய அரசின் சுகாதார அமைச்சு ஆலோசனை நடத்தி வருகிறது.
இதற்கிடையே தடுப்பூசி போடும் திட்டத்தின் இரண்டாவது கட்டமாக 60 வயதை கடந்தோருக்கும் இதர உடல் உபாதைகள் உள்ள 45 வயதிற்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது. இம்முறை 30 மில்லியன் பேர் இதற்காக தங்கள் பெயரைப் பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், டெல்லியிலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் முகாமிட்டு போராட்டங்களை நடத்தி வரும் விவசாயிகள், தடுப்பூசி போட்டுக்கொள்ள இயலாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.
வேளாண் சட்டங்களை எதிர்த்து நடந்து வரும் இப்போராட்டத்தில் அறுபது வயதைக் கடந்த ஏராளமான விவசாயிகள் பங்கேற்றுள்ளனர்.
உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்குத் தடுப்பூசி போடும் பணியும் நேற்று முன்தினம் தொடங்கியது. இதற்கான தடுப்பூசி மையம், உச்ச நீதிமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள், முன்னாள் நீதிபதிகள், அவர்களின் குடும்பத்தினரில் தகுதி உள்ளோர் தங்கள் விருப்பத்தின் அடிப்படையில் தடுப்பூசி போட்டுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த பாஜக எம்பி நந்தகுமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்குப் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் இரண்டாம் கட்டமாக 300 மில்லியன் பேருக்குத் தடுப்பூசி போட மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
இதற்காக 10,000 அரசு, தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும், முதற்கட்டமாக 30 மில்லியன் முன்களப் பணியாளர்களுக்குத் தடுப்பூசி போட அரசு முடிவு செய்திருந்தது. ஆனால் இதுவரை 14.30 மில்லியன் பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
ஆறு மில்லியன் குடிமக்கள் மீட்பு
‘வந்தே பாரத்’ திட்டத்தின் மூலம் இதுவரை ஆறு மில்லியன் இந்தியக் குடிமக்கள் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இத்தகவலை இந்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு மே 6ஆம் தேதி ‘வந்தே பாரத்’ திட்டம் செயல்படத் தொடங்கியதும் 64 விமானங்கள் மூலம், 12,800 பேர் நாடு திரும்பினர் என்றார் அவர்.
உலகில் வேறு எந்த நாடும் தனது குடிமக்களை மீட்பதற்கு இவ்வாறான மிகப் பெரிய நடவடிக்கையை மேற்கொண்டதில்லை எனக் கூறப்படுகிறது. வந்தே பாரத் திட்டத்தின் எட்டாவது கட்டமாக இம்மாதம் 1ஆம் தேதியிலிருந்து மாத இறுதிவரை மேலும் பல விமானங்கள் இயக்கப்பட உள்ளன.