புதுடெல்லி: இரண்டு முதல் பதினெட்டு வயதுக்குட்பட்ட சிறார்கள், பதின்ம வயதினருக்கு தடுப்பூசி போடுவது தொடர்பான பரிசோதனைத் தரவுகளை மத்திய அரசிடம் ஒப்படைத்து இருப்பதாக பாரத் பயோடெக் நிறுவனம் கூறியுள்ளது.
மத்திய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்திடம் தரவுகள் ஒப்படைக்கப்பட்டதை அந்நிறுவனத்தின் தலைவர் டாக்டர் கிருஷ்ணா எல்லா உறுதி செய்துள்ளார் என 'இந்தியா டுடே' ஊடகம் தெரிவித்துள்ளது.
சிறார்களுக்கு கோவேக்சின் தடுப்பூசி போடுவது தொடர்பான பரிசோதனையின் இரண்டாம் கட்டத்தை கடந்த மாதமே முடித்துவிட்டதாக அந்நிறுவனம் தெரிவித்திருந்தது. பரிசோதனைத் தரவுளை மருந்து ஒழுங்குமுறை ஆணையத்திடம் மிக விரைவில் அளிக்க இருப்பதாகவும் கூறியிருந்தது.
இந்தியாவில் அவசரகால பயன்பாட்டுக்காக அங்கீகரிக்கப்பட்டுள்ள ஆறு கொரோனா தடுப்பூசிகளில், 'சைகோவ்-டி' மட்டுமே 12 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு போட அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோவேக்சின் தடுப்பூசியை உற்பத்தி செய்யும் பாரத் பயோடெக் நிறுவனம் குழந்தைகளுக்கும் பதின்ம வயதினருக்கும் போடக்கூடிய தடுப்பூசியை அறிமுகப்படுத்த உள்ளது.
"எங்களது புதிய தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள முன்வந்த தன்னார்வலர்கள் குறித்தும் அவர்களுடன் சம்பந்தப்பட்ட தடுப்பூசி பரிசோதனை தொடர்பான தரவுகளையும் மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்திடம் அளித்துள்ளோம். அதன் பதிலுக்காக காத்திருப்போம்," என்று கிருஷ்ணா எல்லா கூறியுள்ளார்.
இந்தியாவில் இதுவரை 900 மில்லியன் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.