கடலூர்: தமக்குச் சொந்தமான முந்திரி ஆலையில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தது தொடர்பில் கடலூர் திமுக எம்.பி. டிஆர்வி ரமேஷ் இன்று திங்கட்கிழமை காலை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
அவரை வரும் 13ஆம் தேதிவரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தாம் சரணடைந்தது தொடர்பில் கடிதம் மூலம் விளக்கமளித்துள்ள ரமேஷ் எம்.பி., “என்னுடைய முந்திரித் தொழிற்சாலையில் பணிபுரிந்த கோவிந்தராஜ் என்பவரது மரணம் தொடர்பாக சிபிசிஐடி என்மீது பதிவுசெய்துள்ள முதல் தகவலறிக்கையின் அடிப்படையில், திமுகமீது சில அரசியல் கட்சிகள் தங்களுக்கு உரித்தான அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டு தவறான பிரசாரம் மேற்கொண்டிருப்பது என் மனதுக்கு நெருடலாக உள்ளது.
“இந்த இயக்கத்தின் ஒரு தொண்டனாக இது எனக்கு மிகுந்த வேதனையை அளிக்கிறது. முதல்வர் ஸ்டாலின் அமைத்திருக்கும் நல்லாட்சிமீது இப்படி வீண்பழி வீசுபவர்களுக்கு மேலும் இடம் கொடுத்திட வேண்டாம் எனக் கருதி இவ்வழக்கில் நான் நீதிமன்றத்தில் சரணடைகிறேன். என்மீது சுமத்தப்பட்டுள்ள புகார் ஆதாரமற்றது என்பதை சட்டத்தின் முன்பு ஆதாரங்களுடன் நிரூபித்து வெளியே வருவேன்,” என்று கூறியுள்ளார்.
இந்தக் கொலை வழக்கில் ஏற்கெனவே ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.