மும்பை: போதைப்பொருள் வழக்கில் சிக்கியுள்ள தன் மகன் ஆர்யன் கானை இந்தி நடிகர் ஷாருக்கான் சிறையில் சந்தித்தார்.
இந்நிலையில், மும்பையில் உள்ள அவரது வீட்டில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலிசார் நேற்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். இது இந்தி திரையுலகத்தினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று காலை மும்பை ஆர்தர் சாலையில் உள்ள சிறையில் ஆர்யன் கானை சந்தித்துப் பேசிய ஷாருக், இந்த நெருக்கடியான வேளையில் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என மகனுக்கு அறிவுரை கூறியதாகத் தெரிகிறது.
இந்தச் சந்திப்பு உருக்கமானதாக இருந்தது என்று சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்நிலையில், அவசரகால மனுவாகக் கருதி விசாரிக்க வேண்டும் என்று ஆர்யன் கான் தரப்பில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு மீதான விசாரணையை நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
போதைப்பொருள் வழக்கில் சிக்கியுள்ள ஆர்யன் பிணை கோரி ஏற்கெனவே தாக்கல் செய்த மனுக்களை மும்பை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அவர் மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
இதற்கிடையே ஆர்யன், ஷாருக் சந்திப்பு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிராவில் சிறைக்கைதிகளை உறவினர்கள் சந்திப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. இந்நிலையில், அவை திடீரென தளர்த்தப்பட்டு ஷாருக்கான் தன் மகனைச் சந்திக்க வழிவகுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, ஷாருக் கான் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையை அடுத்து, அவரிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்த இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.