புதுடெல்லி: லக்கிம்பூர் வன்முறை தொடர்பான வழக்கு விசாரணையை தாமதப்படுத்துவதாக உத்தரப் பிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
அம்மாநில போலிசார் இதுவரை நான்கு பேரிடம் மட்டுமே விசாரணை நடத்தி இருப்பதை நீதிபதிகள் சுட்டிக்காட்டி உள்ளனர்.
லக்கிம்பூர் வன்முறைச் சம்பவத்தில் நான்கு விவசாயிகள் உட்பட ஒன்பது பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் உள்ளிட்ட சிலர் மீது போலிசார் வழக்குப் பதிவு செய்தனர். உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்துக்குப் பிறகே அமைச்சரின் மகன் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக தொடுக்கப்பட்டுள்ள பொதுநல வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்தது.
அப்போது உத்தரப் பிரதேச காவல்துறை விசாரணையை தாமதப்படுத்துவதாக நீதிபதிகள் தெரிவித்தனர். இத்தகைய தோற்றத்தை உடைக்கும் வகையில் விசாரணையை விரிவுபடுத்த வேண்டும் என்றும் வழக்கை எதிர்கொண்டுள்ள அனைவரிடமும் விரைவில் வாக்குமூலம் பெற வேண்டும் என்றும் கூறினர்.
"44 சாட்சியங்கள் இருப்பதாகக் கூறிவிட்டு, இதுவரை நான்கு பேரிடம் மட்டுமே வாக்குமூலம் வாங்கியுள்ளீ்ர்கள்," என்று நீதிபதிகள் சுட்டிக் காட்டினர்.