புதுடெல்லி: கொரோனா சிகிச்சைக்கு மாத்திரை வடிவிலான மருந்துக்கு மத்திய அரசு விரைவில் அனுமதி அளிக்க உள்ளது.
இத்தகவலை அறிவியல், தொழில்துறை ஆராய்ச்சிக் கழகத்தின் கொரோனா கட்டுப்பாட்டுக்குழுத் தலைவர் மருத்துவர் ராம் விஸ்வகர்மா தெரிவித்துள்ளார்.
கொரோனா பெருந்தொற்றுப் பரவலை வெகுவாகக் கட்டுப்படுத்தி உள்ள நிலையில், தடுப்பூசிக்கு அடுத்தபடியாக மாத்திரைகளும் வருவது நல்ல முன்னேற்றம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இனி எந்த நேரத்திலும் இந்த மாத்திரைகளுக்கு மத்திய அரசின் ஒப்புதல் கிடைக்கக்கூடும் என்றார் அவர்.
மெர்க், ஃபைஸர் ஆகிய இரு நிறுவனங்கள் இந்த மாத்திரை வடிவிலான மருந்தை அறிமுகம் செய்ய உள்ளன.
லேசான, மிதமான கொரோனா தொற்றுப் பாதிப்பு உள்ளவர்களுக்கு இந்த மாத்திரை நல்ல பலன் அளிக்கும் என்றும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை இதனால் குறையும் என்றும் மெர்க் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஃபைஸர் நிறுவனத்தின் பேக்ஸ்லோவிட் மாத்திரை குறித்த பரிசோதனை முடிவுகளின்படி அது மருத்துவமனையில் சேர்க்கப்படுவோர் எண்ணிக்கையையும் உயிரிழப்பையும் 89% தடுப்பதாகத் தெரிய வந்துள்ளது.
எனினும், முதற்கட்டமாக மெர்க் நிறுவன மாத்திரைக்குத்தான் முதலில் அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
"இனிவரும் நாள்களில் தடுப்பூசிகளை விட இந்த மாத்திரைகள்தான் நம் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கும்," என ராம் விஸ்வகர்மா தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, வீடு தேடிச்சென்று தடுப்பூசி போடும் நடவடிக்கையை மேலும் தீவிரமாக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா வலியுறுத்தி உள்ளார்.
நாட்டிலுள்ள அனைவருக்கும் ஒரு தடுப்பூசியேனும் போடப்பட்டிருக்க வேண்டும் என மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இரண்டாவது தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களையும் வீடு தேடிச்சென்று சந்திக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார். நாடு முழுவதும் 79.2 விழுக்காடு பெரியவர்களுக்கு ஒரு தடுப்பூசியும் 37 விழுக்காட்டினருக்கு இரண்டு தடுப்பூசிகளும் போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, நேற்று முன்தினம் தொற்று எண்ணிக்கை லேசாக அதிகரித்துள்ளது. 13,091 பேருக்கு புதிதாக கிருமி தொற்றியுள்ளது. 340 பேர் மாண்டுவிட்டனர்.
இரு நிறுவனங்கள் மத்திய அரசின் அனுமதிக்காக காத்திருப்பு