பெண்ணிடம் 22 முறை அறை வாங்கியவர் அரசியலில் குதித்தார்!

பெண்ணிடம் 22 முறை அறை வாங்கியவர் அரசியலில் குதித்தார்!

1 mins read
8849cdf7-7c06-4889-8dff-ddf325eebd3f
ஆண்களுக்காகக் குரல் கொடுக்கவும் பெண்களால் துன்புறுத்தப்படும் ஆண்களுக்காகச் சேவையாற்றவும் முடிவுசெய்து, அரசியலில் இறங்கி இருப்பதாகச் சொன்னார் சாதத் அலி என்ற இந்த ஆடவர். படம்: இணையம் -

பரபரப்பான சாலைச் சந்திப்பின் நடுவே, பலருக்குமுன் பெண்ணிடம் 22 முறை அறை வாங்கிய டாக்சி ஓட்டுநர் அரசியலில் கால்பதித்துள்ளார்.

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத் தலைநகர் லக்னோவில் நிகழ்ந்த அந்த 'அறை' சம்பவம், சமூக ஊடகவாசிகளிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

காரணமின்றி அந்த ஆடவரை அறைந்ததோடு, அவரது கைபேசியையும் சுக்குநூறாக உடைத்தார் அப்பெண்.

போக்குவரத்துக் காவல்துறையினர் தலையிட்டும் அப்பெண் அறைவதை நிறுத்தவில்லை. அந்த ஆடவர் ஓட்டி வந்த கார் தம்மை இடித்துவிட்டதாகக் குற்றம் சாட்டினார் அப்பெண்.

ஆயினும், அடிவாங்கிய ஆடவர்மீதுதான் காவல்துறை புகார் பதிவுசெய்தது. அதனால் அதிர்ச்சியடைந்த சமூக ஊடகவாசிகள், அந்தப் பெண்ணைக் கைதுசெய்ய வேண்டும் என்று காவல்துறைக்கு வேண்டுகோள் விடுத்தனர்.

சம்பவம் நிகழ்ந்து நான்கு மாதங்களாகிவிட்ட நிலையில், இப்போது அரசியலில் அடியெடுத்து வைத்துள்ளார் சாதத் அலி.

உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவின் சகோதரர் சிவ்பால் சிங் யாதவ் தொடங்கிய பிரகதிஷீல் சமாஜ்வாடி கட்சியில் அவர் இணைந்துள்ளார்.

தமக்கு நேர்ந்ததை ஒருபோதும் மறக்கப்போவதில்லை எனக் கூறினார் சாதத் அலி.

ஆண்களுக்காகக் குரல் கொடுக்கவும் பெண்களால் துன்புறுத்தப்படும் ஆண்களுக்காகச் சேவையாற்றவும் முடிவுசெய்து, அரசியலில் இறங்கி இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.